“விஜய் ஆண்டனியின் ‘எமன்’ படக்கதை”: இயக்குனர் ஜீவா சங்கர் கூறுகிறார்!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2017/02/0a-13.jpg)
விஜய் ஆண்டனி நடிப்பில் வருகிற (பிப்ரவரி) 24 ஆம் தேதி உலகெங்கும் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘எமன்’. அரசியலை மையமாக கொண்டு ஜீவா சங்கர் இயக்கி இருக்கும் இந்த ‘எமன்’ திரைப்படத்தை, ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ராஜு மகாலிங்கமும், ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்’ சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனியும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.
மியா ஜார்ஜ் கதாநாயகியாக நடித்திருக்கும் ‘எமன்’ திரைப்படம், ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இப்படம் குறித்து இதன் இயக்குனர் ஜீவா சங்கர் கூறுகையில், “ஒரு ரசிகனின் கண்ணோட்டத்தில் இருந்து தான் நான் எப்பொழுதும் கதை எழுதுவேன். அதற்குப்பிறகு தான் அதை எப்படி காட்சிப்படுத்தலாம் என்பதை ஒரு இயக்குநராகவும், ஒளிப்பதிவாளராகவும் இருந்து சிந்திப்பேன். இந்த ‘எமன்’ படத்தின் கதையையும் நான் அந்த வகையில் தான் உருவாக்கி இருக்கிறேன்.
ஒரு சராசரி மனிதன், அரசியல் மூலமாக தன்னுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொண்டு, சிம்மாசனத்தில் அமர முயற்சி செய்கிறான். அதில் அவன் வெற்றி பெற்றானா, இல்லையா? என்பது தான் ‘எமன்’ படத்தின் ஒரு வரி கதை.
தன்னுடைய முழு அர்ப்பணிப்பையும், கடின உழைப்பையும் கொடுத்து, ‘எமன்’ படத்திற்கு புத்துயிர் கொடுத்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. வருகிற 24 ஆம் தேதி வெளியாகும் எங்களின் ‘எமன்’ திரைப்படம் மூலம் ரசிகர்கள் அதை உறுதி செய்வார்கள்” என்கிறார் இயக்குநர் ஜீவா சங்கர்.