“பெரியார் போற்றுதும், பெரியார் சிந்தனை போற்றுதும்”: நிர்மலா சீதாராமனுக்கு விஜய் பதிலடி!

“தமிழைக் காட்டுமிராண்டி மொழி என பெரியார் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே மத்திய அரசின் நிதியமைச்சருக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழகத்தில் திணிக்காமல் இருக்கலாமே?” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழைக் காட்டுமிராண்டி மொழி என பெரியார் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே மத்திய அரசின் நிதி அமைச்சருக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழகத்தில் திணிக்காமல் இருக்கலாமே? முரண்களைக் கடந்து எங்கள் கொள்கைத் தலைவரான பெரியாரை தமிழகம் இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?

குழந்தைத் திருமணத்தை எதிர்த்ததால், விதவை மறுமணத்தை ஆதரித்ததால், சாதிக் கொடுமைகளை எதிர்த்ததால் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இன்றைய நிலையுடன் பொருத்திப் பார்த்துச் சொன்னால், இன்று எல்லோரும் கேட்கும் சமூக நீதிக்கான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நூறாண்டுகளுக்கு முன்பே கேட்டவர் என இன்னும் அவரைப் போற்றுவதற்கான பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

மத்திய அரசின் மீதான விமர்சனங்களை மறைப்பதற்குக் கூடப் பெரியார் தொடர்பான சர்ச்சையைக் கிளப்பும் அளவுக்கு வலுவானவராக இன்றும் பெரியார் இருக்கிறாரே, இது போதாதா அவரைத் தமிழகம் ஏன் இன்றும் மாலை மரியாதை செய்து போற்றுகிறது என்பதற்கு? பெரியார் போற்றுதும், பெரியார் சிந்தனை போற்றுதும்!” என்று விஜய் பதிவிட்டுள்ளார்.