‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின் கதைச் சுருக்கம்!

எழில்மாறன் புரொடக்க்ஷன் – விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் வழங்கும் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின் கதைச்சுருக்கம்:

கிருஷ்ணாபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஜாக்கெட் ஜானகிராமனுக்கு விசுவாசியாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும், அவருக்கு சகலமுமாகவும் இருக்கிறான் டெய்லர் முருகன்.

ஜாக்கெட் ஜானகிராமன் இருக்கும் அதே கட்சியைச் சேர்ந்த வேறொரு தொகுதி எம்.எல்.ஏ.வான மருதமுத்து, மந்திரி பதவிக்கு ஆசைப்படுகிறார். ஜாக்கெட் ஜானகிராமனை தனது போட்டியாளராக நினைக்கும் மருதமுத்து, சந்தர்ப்பம் பார்த்து ஜானகிராமனை தீர்த்து கட்டவும் முடிவு செய்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, ஊர்விட்டு ஊர் வந்து ஹோட்டல் கடை நடத்தும் ராஜாமணி, எம்.எல்.ஏ. ஜாக்கெட் ஜானகிராமனிடம் டெய்லர் முருகனுக்கு இருக்கும் செல்வாக்கு பற்றி கேள்விப்படுகிறார். அதனால் தன் மகள் அர்ச்சனாவுக்கு போலீஸ் வேலை வாங்கித் தருமாறு முருகனிடம் கூறி, லஞ்சமாக ரூ.25லட்சம் பணம் கொடுக்கிறார்.

பணத்தை வாங்கும் முருகன், பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக, தான் ஒருதலையாக காதலிக்கும் பெண்ணான அர்ச்சனாவின் தந்தையே தன் மகள் வேலைக்காக தன்னை நாடி வந்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எப்படியாவது போலீஸ் வேலை வாங்கிக் கொடுத்து தன் காதலியை அடைய வேண்டும் என்று நினைக்கிறான்.

அந்த பணத்தை, உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் மந்திரியை பார்பதற்காக சென்னைக்கு கிளம்பிக்கொண்டிருக்கும் எம்.எல்.ஏ ஜாக்கெட் ஜானகிராமனிடம் கொடுத்து, விவரத்தைச் சொல்லுகிறான். ‘அவரும் டி.ஜி.பியை நேரில் சந்தித்து வேலையை கச்சிதமாக முடிக்கிறேன்’ என்று கூறிவிட்டு சென்னைக்கு செல்கிறார்.

சென்னையில் மந்திரியையும், டி.ஜி.பியையும் ஜாக்கெட் ஜானகிராமன் சந்தித்தாரா, இல்லையா? அங்கு அவருக்கு என்ன ஆனது? அர்ச்சனாவுக்கு வேலை கிடைத்ததா, இல்லையா? முருகனின் காதல் என்னவாயிற்று? என்பது நகைச்சுவை கலந்த மீதிக்கதை.

நாயகன் முருகனாக விஷ்ணு விஷால், நாயகி அர்ச்சனாவாக நிக்கி கல்ராணி, எம்.எல்.ஏ. ஜாக்கெட் ஜானகிராமனாக ரோபோ ஷங்கர், எம்.எல்.ஏ. மருதமுத்துவாக நரேன், ராஜாமணியாக ஞானவேல் உட்பட பலர் நடித்துள்ள இப்படத்தில், வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார்.

கதை, திரைக்கதை எழுதி, எஸ்.எழில் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

இசை – சி.சத்யா

ஒளிப்பதிவு – சக்தி

வசனம் – எழிச்சூர் அரவிந்தன், ஜோதி அருணாச்சலம்

பாடல்கள் – யுகபாரதி

கலை – யு.ஜே.முருகன்

படத்தொகுப்பு – ஆனந்தலிங்ககுமார்

நடனம் – தீனா

சண்டை – ஃபயர் கார்த்திக்

தயாரிப்பு நிர்வாகம் – சங்கர்தாஸ்

ஊடகத்தொடர்பு – ரியாஸ் கே.அகமது