வேதாளம் – விமர்சனம்

இந்த வருடம் வசூலில் சாதனை படைத்த படங்களின் பட்டியலில் நிச்சயம் இடம்பெறும் என்று அடித்துச் சொல்வதற்கான அத்தனை அம்சங்களும் கலந்த கலவையாக தீபாவளி விருந்து படைக்க வந்திருக்கிறது அஜித்தின் ‘வேதாளம்’

படம் ஆரம்பத்தில் கொஞ்சம் சோம்பலாக, கொட்டாவி விட்டபடி மெதுவாய் நகருகிறது. பின்னர் மெல்ல மெல்ல கதைக்குள் நுழைய ஆரம்பித்தபின், திடுக்கிட வைக்கும் திருப்பங்களுக்கு மேல் திருப்பங்கள் என ஜெட் வேகத்தில் பாய்ச்சல் காட்டுகிறது

தங்கை லட்சுமி மேனனை கல்லூரியில் சேர்க்க சென்னையிலிருந்து கொல்கத்தா போகிறார் அஜித். அங்கு கால்டாக்சி டிரைவராக இருக்கும் மயில்சாமியின் உதவியுடன் வீடு எடுத்து தங்குகிறார். மயில்சாமி, தான் பணி புரியும் கால்டாக்சி நிறுவனத்தின் உரிமையாளரான சூரியுடன் பேசி, அஜித்துக்கு கால்டாக்சி டிரைவர் வேலை வாங்கித் தருகிறார்.

வக்கீலாக இருக்கும் ஸ்ருதிஹாசன் ஒருநாள் அஜித்தின் கால்டாக்சியில் ஏறுகிறார். அப்போது அஜித்தின் வெகுளித்தனத்தை பார்த்து, நீதிமன்றத்தில் பொய் சாட்சி சொல்ல வைக்கிறார். ஆனால், எதிர்பாராதவிதமாக, இவர் பொய் சாட்சி என்ற விவரம் நீதிமன்றத்தில் தெரியவர, ஸ்ருதிஹாசனுக்கு வேலை போகிறது. இதனால் ஸ்ருதிஹாசன் அஜித் மீது கோபமடைகிறார்.

இந்நிலையில் ஸ்ருதிஹாசனின் அண்ணனான அஸ்வின், அஜித்தின் கால்டாக்சியில் பயணம் செய்கிறார். அப்போது லட்சுமிமேனனை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இப்படியாக லட்சுமிமேனன் மீது அஸ்வின் காதல் வயப்படுகிறார். இவரது காதலுக்கு அஜித்தும் பச்சைக்கொடி காட்ட, இருவருக்கும் திருமண செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.

ஒருபுறம் பாசக்கார அண்ணனாக இருக்கும் அஜித், மறுபுறம் கொல்கத்தாவில் உள்ள போதைப் பொருள் கடத்தல் கும்பலை ஆக்ரோஷமாக அழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். கடத்தல் கும்பலின் தலைவனான ராகுல் தேவ்வின் இரண்டு தம்பிகளை அஜித் கொலை செய்யும்போது, அதை ஸ்ருதிஹாசன் பார்த்து விடுகிறார்.

கொலைகாரனின் குடும்பத்தில் தன் அண்ணனுக்கு பெண் எடுப்பதாக நினைத்து ஸ்ருதிஹாசன் வருந்துகிறார். இதையறியும் அஜித், லட்சுமிமேனன் தன் தங்கை இல்லை என்று கூறுகிறார். மேலும் தன்னுடைய கடந்தகால வாழ்க்கையை ஸ்ருதிஹாசனிடம் பிளாஷ் பேக்காக விவரிக்கிறார்.

லட்சுமிமேனன் அஜித்தின் தங்கை இல்லையென்றால், அவர் யார்? எதற்காக போதைப் பொருள் கடத்தல் கும்பலை அஜித் அழிக்கிறார்? என்ற மீதிக்கதையை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.

படத்தின் நாயகனாக அஜித், மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இதுவரை பார்க்காத அஜித்தை இப்படத்தில் பார்க்க முடிகிறது. முற்பகுதியில் இவருடைய வெகுளித்தனமும், தங்கை மீதுள்ள பாசமும் ரசிக்க வைக்கிறது. பிற்பகுதியில் இவருடைய அதிரடியான நடிப்பு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் கைதட்டல் பெறுகிறார். தன்னுடைய கடின உழைப்பைக் கொடுத்து கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் அஜித். பாடல் காட்சிகளில் சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பாசமிகு தங்கையாக நடித்திருக்கிறார் லட்சுமி மேனன். மற்ற படங்களில் நடித்ததைவிட இப்படத்தில் மேலும் சிறப்பாக  நடித்து அதிக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். வக்கீலாக வரும் ஸ்ருதிஹாசன் நடிப்பு ஓ.கே. ரகம். அவர் அஜித்தின் வெகுளித்தனத்தை கிண்டல் செய்வது ரசிக்க வைக்கிறது.

வில்லனாக நடித்திருக்கும் ராகுல் தேவ் மற்றும் கபீர் சிங், வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். பார்வையற்றவராக நடித்திருக்கும் தம்பிராமையா, கால்டாக்சி டிரைவர் மயில்சாமி, கால்டாக்சி உரிமையாளர் சூரி, கோவை சரளா ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

’வீரம்’ படத்தில் ரசிகர்களை வியக்க வைத்த இயக்குனர் சிவா, இப்படத்திலும் இரட்டிப்பான வியப்பை கொடுத்திருக்கிறார்.  இடைவேளை காட்சியும், கிளைமாக்ஸ் காட்சியும் ரசிகர்களை அடுத்த கட்டத்திற்கு இழுத்து செல்கிறது. அஜித்திடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர். அஜித் ரசிகர்களுக்கு எப்படிப்பட்ட படத்தை கொடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்திருக்கிறார். அஜித்தை வைத்து முழுமையான சென்டிமென்ட் படத்தை கொடுத்திருக்கிறார். மேலும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருக்கிறார்.

அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன. அதை திரையில் பார்க்கும்போது, மேலும் ரசிக்க வைத்திருக்கிறது. குறிப்பாக ‘ஆலுமா….’ பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கிறது. அஜித்தின் அறிமுக காட்சி, வில்லனுக்கு பின்னணி இசை என அனைத்திலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் அனிருத். வெற்றியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

‘வேதாளம்’ – தல தீபாவளி!.