“உழைக்கும் மக்களின் வலியை பேசும் ‘வாழை”: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

வெகுமக்களின் அமோக ஆதரவுடன் உலகெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’.

அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சான் பிரான்சிஸ்கோவில் இப்படத்தைப் பார்த்துவிட்டு, இயக்குநர் மாரி செல்வராஜுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் ‘வாழை’யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜ் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள். பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!

பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென ’முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம். தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

என் முதல் படமான பரியேறும் பெருமாளிலிருந்து கர்ணன், மாமன்னனை தொடர்ந்து இன்று வாழை வரை என் அத்தனை படங்களையும் பார்த்துவிட்டு உடனே அழைத்து பெரும் ப்ரியத்தோடு என் படைப்பையும் என் உழைப்பையும் பெரும் நம்பிக்கையோடு கொண்டாடி வரும் தமிழக முதல்வர் மாண்புமிகு ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் ” எனக் கூறியுள்ளார்.