“கொச்சை விமர்சனங்களால் ரஜினியை, ரஞ்சித்தை வீழ்த்த முடியாது!” – திருமாவளவன்

“கபாலி’ படம் பார்த்தீர்களா?” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனிடம் கேட்டதற்கு, அவர் அளித்துள்ள பதில் வருமாறு;-

‘கபாலி’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இரு குழுக்களுக்கு இடையே நடக்கும் மோதல் பற்றிய கதை தான் படம். இதில் எங்கேயுமே சாதி முன்னிறுத்தப்படவில்லை. தமிழர் அடையாளம், கொத்தடிமைக் கலாச்சாரம் தான் முன் நிறுத்தப்படுகின்றன.

ஆனால், பா.ரஞ்சித் தலித் சமூகத்தைச் சார்ந்த இயக்குனர் என்ற காரணத்தினாலேயே அவர் மீது விமர்சனம் வைக்கிறார்கள்.

ரஜினிகாந்துக்குத் தெரியாமல் ரஞ்சித்தால் ஒரு வசனம்கூட படத்தில் பேச வைத்திருக்க முடியாது. சாதி என்ற எல்லைகளைக் கடந்து, சினிமா என்ற அடிப்படையில் தான் படத்தைப் பார்த்திருக்கிறார் ரஜினிகாந்த்.

இந்த விமர்சனங்களை எல்லாம் கடந்து படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கொச்சையான விமர்சனங்களால் ரஜினிகாந்தையும், ரஞ்சித்தையும் வீழ்த்த முடியாது.

படம் பார்த்து முடித்ததுமே ரஞ்சித்தை அழைத்து வாழ்த்தினேன்.

மகிழ்ச்சி.

இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.