தமிழிசை சௌந்தரராஜன் விஷமம்: காவிரி பிரச்சனையில் ரஜினியை கோர்த்துவிட முயற்சி!

காவிரி பிரச்சனையை சாக்காக வைத்துக்கொண்டு, கன்னட அமைப்புகள் என்ற போர்வையில், கர்நாடகாவில் பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள், அங்குள்ள அப்பாவி தமிழர்களையும், தமிழர்களின் உடைமைகளையும் தாக்கி வன்முறை வெறியாட்டம் நடத்திவருகின்றன.

மறுபுறம் தங்களுக்கும் இந்த வன்முறைக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு போன்ற இந்துத்துவவாதிகள், “அமைதி திரும்ப வேண்டும்” என்று கூறி பொய்யாய் பம்மாத்து பண்ணி வருகிறார்கள்.

இந்நிலையில், தேரை இழுத்து தெருவில் விடுவது போல, இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்தை கோர்த்துவிடும் வகையில், “காவிரி பிரச்சனை குறித்து இரு மாநில மக்களுக்கும் நன்கு அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்படத் துறையினர் பேச வேண்டும்” என்று பாஜகவின் தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

காவிரி பிரச்சனைத் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற கர்நாடக அரசு தவறி விட்டது. பெங்களூரு வன்முறைக்கு முழுக்க முழுக்க சுயநல அரசியல்வாதிகளே காரணம். இந்த வன்முறையால் இரு மாநில மக்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உடனடியாக கர்நாடக அரசு பதவி விலக வேண்டும்.

இரு மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு நிலை பெருமளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பிரச்சனைகள் எழும்போது இரு மாநில மக்களுக்கும் நன்கு அறிமுகமான ரஜினிகாந்த் போன்ற திரையுலகத்தினர் பேச வேண்டும்.

காவிரி பிரச்சனை குறித்து இரு மாநில முதல்வர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.காவிரியில் தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்பதை அணையில் ஆய்வு செய்தால் தெரிந்து விடும் என்பதால்தான், மக்களுக்கு குடிப்பதற்கே தண்ணீர் இல்லை என்று கர்நாடக அரசு நேற்று வரை பொய் சொல்லி வந்தது. ஆனால் இப்போது 2017ஆம் ஆண்டு ஜனவரி வரை தங்களுக்கு தண்ணீர் இருப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடவில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

தமிழிசை சௌந்தரராஜனின் கட்சிக்காரர்கள் கர்நாடகாவில் மூடிக்கொண்டிருந்தாலே பிரச்சனை தீர்ந்து அமைதி திரும்பி விடும். அதை விடுத்து அவர் ரஜினியை இதில் இழுத்துவிடுவது விஷமத்தனமானது என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.