சென்னையில் மலையாள திரைப்பட கலைஞர்கள் பங்கேற்கும் ‘ஆவணி பூவரங்கு’ திருவிழா!

தமிழ்நாடு வாழ் மலையாள மக்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னையில், வருகிற 8 , 9 தேதிகளில் ‘ஆவணி பூவரங்கு’ திருவிழா நடைபெறுகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் இந்த திருவிழா, சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.

விமர்சையாக நடைபெற இருக்கும் இந்த ‘ஆவணி பூவரங்கு’ திருவிழாவில் இயக்குனர்கள் ஹரிஹரன், கே.எஸ்.சேதுராமன், ஐ.வி.சசி, கலை இயக்குனர் சாபு சிரில், நடிகை சீமா, நடிகர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட மலையாள  திரையுலகின் பல முன்னணி கலைஞர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

இந்த தகவலை தமிழ்நாடு வாழ் மலையாள மக்களின் கூட்டமைப்பபு கௌரவ தலைவர் எம்.பி.புருஷோத்தமன், நிறுவனர் கோகுலம் கோபாலன், தலைவர் எம்.எ.சலீம், ‘ஆவணிப்பூவரங்கு’ நிறுவனர் வி.சி.பிரவீன், டாக்டர் எ.வி.அனூப் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

“18ஆம்  ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘ஆவணிப் பூவரங்கு’ திருவிழா, வெறும் கலை நிகழ்ச்சிகளோடு மட்டும் நின்று விடாமல், தமிழக – கேரள மக்களின் நலன்களுக்காக பல திட்டங்களையும் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதுவரை நாங்கள் 180 இதய நோயாளி குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை நடத்தி இருக்கிறோம். அதில் தற்போது 179 குழந்தைகள் ஆரோக்கியமாகவும், இயல்பாகவும் இருக்கிறார்கள். எங்கள் அமைப்பின் தூதராக செயல்பட்டுக்கொண்டிருக்கும் கமல்ஹாசன் சாருக்கு நன்றி” என்றார் ‘ஆவணி பூவரங்கின்’ நிறுவனர்  வி.சி.பிரவீன்.

“தமிழக – கேரள மக்கள் இடையே நிலவிவரும் சகோதர உறவை கொண்டாடும் தருணம் இது. இரு மாநிலங்களின் நட்புறவை மேம்படுத்தும் ஒரு திருவிழா தான் இந்த ஆவணிப் பூவரங்கு” என்றார்,  தமிழ்நாடு வாழ் மலையாள மக்களின் கூட்டமைப்பின்  நிறுவனரும், ‘பழசி ராஜா’, ‘தூங்காவனம்’ உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளருமான கோகுலம் கோபாலன்.