அனைத்து இந்திய மொழி நடிகர் – நடிகைகள் பங்கேற்க உள்ள ஸ்டண்ட் யூனியன் பொன்விழா!

திரைப்பட ஸ்டண்ட் யூனியனின் பொன்விழா வரும் ஆகஸ்டு 26ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான கலை நிகழ்ச்சியாக கொண்டாடப்பட இருக்கிறது. இதில் அனைத்து இந்திய மொழிகளின் நடிகர் – நடிகைகள் பங்கேற்க இருக்கிறார்கள்.

இது குறித்து ஸ்டண்ட் யூனியன் தலைவர் அனல் அரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சினிமாத்துறையின் வெற்றிக்கும் உருவாக்கத்திற்கும் ஒவ்வொரு கலைஞனும் போராடி உழைத்துத் தான் வெள்ளித்திரை பிரகாசிக்கிறது. கூட்டுக் குடும்பமாக உழைத்துத் தான் ஒரு படம் திரைக்கு வருகிறது அப்படி உயிரைக் கொடுத்தும், உடல் உறுப்புகளை கொடுத்தும் உழைக்கும் துறை எங்கள் ஸ்டண்ட் யூனியன்.

எம்.ஜி.ஆரால் துவக்கி வைக்கப்பட்ட எங்கள் யூனியன், பொன்விழா ஆண்டை தொட்டிருப்பது எங்கள் உறுப்பினர்கள் 650 பேருக்கும்  மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயம். இந்த யூனியனின் வளர்ச்சிக்கு இன்றும் எங்களோடு இணைந்து பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறோம்.

இன்று எங்களோடு இல்லாவிட்டாலும் யூனியனின் வளர்ச்சிக்கு உழைத்து மறைந்துவிட்ட ஸ்டண்ட் கலைஞர்கள் ஒவ்வொருவரின் நல்லாசியுடன் கம்பீரமாக நாங்கள் ஐம்பதை கடந்திருக்கிறோம்.

இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக, எங்கள் யூனியனின் பொன்விழாவை வருகிற ஆகஸ்ட் 26ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான கலை நிகழ்ச்சியாகக் கொண்டாட இருக்கிறோம்.

நாங்கள் இந்திய மொழிப் படங்கள் எல்லாவற்றிலும் இணைந்திருக்கிறோம். எங்கள் உழைப்பைப் பற்றியும் எங்கள் இழப்பைப் பற்றியும் எல்லா நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் எல்லா கலைஞர்களுக்கும் தெரியும். அதனால் விழாவுக்கு எல்லோரையும் நேரிடையாக அழைக்க உள்ளோம். எங்களுடைய அழைப்புக்கு நிச்சயம் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறோம்.

விழாவில் மூத்த உறுப்பினர்களை கெளரவப்படுத்த உள்ளோம்.

சுமார் 6 மணி நேரம் நடைபெற உள்ள கலைநிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டம் மற்றும் எங்கள் ஸ்டண்ட் கலைஞர்களின் ஸ்டண்ட் காட்சிகளும் நடைபெறும்.. கலா மாஸ்டரின் குழுவினரின் பங்களிப்போடு பிரமாண்டமான கலைநிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்த ஷோ இயக்குனராக ‘மானாட மயிலாட’ புகழ் கோகுல்நாத் இருக்கிறார். பொன்விழா குழு தலைவராக ஸ்டண்ட் மாஸ்டர் தியாகராஜன் சார் எங்களோடு இருப்பது எங்களுக்கு ரொம்பவும் பெருமை..

இவ்வாறு அனல் அரசு கூறினார்

அவருடன் செயலாளர் செல்வம், பொருளாளர் ஜான், இணை செயலாளர் ஆர்.நாராயணன், துணை செயலாளர் பரமசிவம், துணைத் தலைவர் ராக்கி ராஜேஷ், உபதலைவர் கே. பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஏராளமான ஸ்டண்ட் மாஸ்டர்கள் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.