போராட்டம் எதிரொலி: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா – தப்பியோட்டம் – இந்தியாவில் தஞ்சம்!

வங்கதேச மாணவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்து விட்டார். மேலும் சகோதரி ஷேக் ரெஹானாவுடன் வங்கதேசத்தை விட்டு தப்பி வெளியேறி இருக்கிறார். வங்கதேசத்தை விட்டு தப்பி ஓடிய ஷேக் ஹசீனாவும் அவரது சகோதரி ஷேக் ரெஹானாவும் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக மாணவர்கள் போராட்டத்துக்கு மதிப்பளித்து பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அந்நாட்டு ராணுவம் கெடு விதித்தது.
வங்கதேச விடுதலைப் போரில் ஈடுபட்ட ராணுவத்தினருக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் அரசுக்கு எதிரான போராட்டமாக உருமாறியது.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக வெடித்த இந்த புரட்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் வங்கதேசம் முழுவதும் அசாதாரண பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து வெளிநாட்டவர் தங்கள் நாடுகளுக்கு திரும்பினர். இந்த நிலையில் மீண்டும் மாணவர்கள் புரட்சி வெடித்தது. மாணவர்களின் இடைவிடாத போராட்டம் மிகப் பெரும் வன்முறையாக வெடித்ததால் பாதுகாப்பு படையினர் இந்த கிளர்ச்சியை ஒடுக்க முயன்றனர். இதில் மேலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களின் ரத்த வெள்ளத்தில் வங்கதேசம் தகித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் வங்கதேச ராணுவ அதிகாரிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அந்நாட்டின் ராணுவ தளபதி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். மேலும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ராணுவம் அறிவுறுத்தியது. ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய 45 நிமிடம் கெடு விதித்தது ராணுவம்.
இதனால் வேறுவழியே இல்லாமல் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமது பதவியை ராஜினாமா செய்த கையோடு, ஷேக் ஹசீனா தனது தங்கை ஷேக் ரெஹானாவுடன் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாகவும் அந்த ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.