நேர்மை இல்லாமல் சம்பாதிக்கும் பணத்தால் சங்கடம் வரும் என சொல்லும் ‘ரூபாய்’!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2017/06/0a1f-1.jpg)
காட் பிக்சர்ஸ் பிரபுசாலமன் தயாரிக்க, ஆர்.பி.கே. எண்டர்டெய்ன்மன்ட் ஆர்.ரவிச்சந்திரன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூபாய்’.
சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். இவர்கள் இருவரும் பிரபுசாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தில் அறிமுகமானவர்கள். இவர்களுடன் கிஷோர் ரவிச்சந்திரன், சின்னிஜெயந்த், ஹரீஷ் உத்தமன், ஆர்.என்.ஆர்.மனோகர், மாரிமுத்து, வெற்றிவேல் ராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் எம்.அன்பழகன். இப்படம் பற்றி இயக்குனர் கூறுகையில், “பணம் எல்லோருக்கும் அவசியம் தான்.. அதை நியாயமாக சம்பாதித்தால் சந்தோஷமாக வாழலாம். நேர்மை இல்லாமல் சம்பாதிக்கும் பணத்தால் சந்தோஷத்தை தொலைப்பதோடு சங்கடங்களையும் சந்திக்க நேரிடும். இதை தான் இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறோம்.
“பரணி (கயல் சந்திரன்), பாபு (கிஷோர் ரவிச்சந்திரன்) இருவரும் நண்பர்கள். இரண்டு நாளைக்குள் லாரிக்கான கடன் தவணையைக் கட்டவில்லை என்றால், இவர்களின் ஒரே சொத்தான லாரியை சேட்டு பறிமுதல் செய்துவிடுவார் என்ற நிலையில் தேனியில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சவாரி வருகின்றனர். வந்த இடத்தில் குங்குமராஜன் (சின்னி ஜெயந்த்), பொன்னி (கயல் ஆனந்தி) இருவரையும் சந்திப்பதால், இவர்களோடு சேர்ந்து வாழ்க்கையில் எதிர்பாராத பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார்கள். இறுதியில் அந்த பிரச்சனையில் இருந்து நால்வரும் மீண்டார்களா, இல்லையா? என்ற பதிலுக்காக பயணம்தான் இந்த ‘ரூபாய்’.
“இதை ஒரு நேர்க்கோட்டில் பயணிக்கும் மாதிரியான தெளிவான திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறோம்… ஜனரஞ்சகமான படமாக ‘ரூபாய்’ இருக்கும். படம் விரைவில் வெளிவர உள்ளது” என்றார்.
ஒளிப்பதிவு – வி.இளையராஜா
இசை – டி.இமான்
பாடல்கள் – யுகபாரதி
எடிட்டிங் – ஆர்.நிர்மல்
கலை – ஏ.பழனிவேல்
நடனம் – நோபல்
ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்
நிர்வாக தயாரிப்பு – ஜே.பிரபாகர்
ஊடகத் தொடர்பு – மௌனம்ரவி