சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்: ரசிகர்களை வணங்கினார்!

அமெரிக்காவில் ஓய்வில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஞாயிறு) இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்கத் திரண்டிருந்த ரசிகர்களை அவர் வணங்கினார்.

0a5

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வெள்ளியன்று வெளியாகி, முந்தைய சாதனைகளை முறியடிக்கும் வண்ணம்  வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

‘கபாலி’ பட வேலைகள் நிறைவடைந்தவுடன், சுமார் 2 மாதங்களுக்குமுன், ரஜினிகாந்த் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் அமெரிக்கா சென்றார். ‘கபாலி’ படத்தின்  இசை வெளியீடு உள்ளிட்ட நிகழ்வுகளில்கூட அவர் கலந்து கொள்ளவில்லை.  அதேசமயத்தில், அவரது உடல்நிலை பற்றிய வதந்திகள்  இங்கே பரவத் தொடங்கின. அதை ரஜினி குடும்பத்தினர் மறுத்து, அவர் ஓய்வெடுப்பதற்காகவே அமெரிக்கா சென்றிருப்பதாக அறிக்கை வெளியிட்டனர்.

அதேபோல் ரஜினி அவரது மகள்  ஐஸ்வர்யாவுடன் அமெரிக்காவில் கோவிலில் வழிபடுவது, திரையரங்கு ஒன்றில் ‘கபாலி’ சிறப்புக்காட்சியை பார்ப்பது உள்ளிட்ட புகைப்படங்களும், ரஜினி அங்கே தனியாக வாக்கிங் செல்வது போன்ற வீடியோ  காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளம்பின.

இந்நிலையில் ரஜினி, விமானம் மூலம் துபாய் வழியாக இன்று (ஞாயிறு) இரவு 8.40 மணிக்கு சென்னை திரும்பினார். அவர் சென்னை திரும்பும் தகவல் அறிந்த அவரது ஏராளமான ரசிகர்கள், சென்னை விமான நிலையத்தில் திரண்டனர். அவர்கள் ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த ரஜினி, உடல்நலத்துடன் உற்சாகமாக காணப்பட்டார். அவரை பேட்டியெடுக்க அங்கு காத்திருந்த செய்தியாளர்களிடம் அவர் எதுவும் பேசாமல், ரசிகர்களைப் பார்த்து வணங்கிவிட்டு, மகிழ்ச்சியுடன் கையசைத்தவாறு சென்றுவிட்டார்.

ரஜினி வருகையால் சென்னை விமான நிலையம் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.