அராஜக கமிஷனர் ஜார்ஜ் டிஜிபி ஆகிறார்!

வெகுமக்களுக்கு எதிரான அராஜக நடவடிக்கைகளுக்கு பேர் போன சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் விரைவில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, தமிழக உளவுப் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டவர் டி.கே.ராஜேந்திரன். இவர் சட்டம் ஒழுங்கு பிரிவை தற்போது வரை கூடுதலாக கவனித்து வருகிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். ஜெயலலிதா நியமித்த அதிகாரிகளை அவர் பெரிய அளவில் மாற்றவில்லை. டி.கே.ராஜேந்திரன் உளவுப் பிரிவிலும், சென்னை காவல் ஆணையராக எஸ்.ஜார்ஜும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் பினாமியான எடப்பாடி பழனிசாமி தற்போது முதல்வர் ஆகியுள்ளார். இவர் அதிகாரிகள் மட்டத்தில் சில மாற்றங்களை செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் முன்னோட்டமாகவே, சில நாட்களுக்கு முன்பு தமிழக உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த சத்தியமூர்த்தி மாற்றப்பட்டு, காவலர் நலப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் உளவுப் பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையராக உள்ள எஸ்.ஜார்ஜை தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்க வாய்ப்பு இருப்பதாகவும் டிஜிபி அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அதேபோல, சென்னை காவல் ஆணையர் பதவிக்கு கூடுதல் காவல் ஆணையர்களான சஞ்சய் அரோரா, ஜே.கே.திரிபாதி, எஸ்.ஜாங்கிட், சி.கே.காந்திராஜன், சைலேந்திரபாபு ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

டி.கே.ராஜேந்திரன் வரும் ஜூன் மாதமும், ஜார்ஜ் செப்டம்பர் மாதமும் ஓய்வு பெற உள்ளனர். அரசு விரும்பினால், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ளவர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

.