“பிறப்பால் நான் தமிழச்சி”: த்ரிஷா அறிக்கை! ‘பீட்டா’ உறவு பற்றி மௌனம்!

தமிழினத்தின் தனித்த அடையாளங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு விளையாட்டை அழித்தொழிக்க முனைப்பாக செயல்பட்டு வருவதோடு, தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றால் தமிழக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று மிரட்டியும் வருகிறது ‘பீட்டா’ என்ற அமெரிக்க தன்னார்வ அமைப்பு.

இத்தகைய தமிழின விரோத, நயவஞ்சக அந்நிய ‘பீட்டா’ அமைப்பில் உறுப்பினராகவும், அந்த அமைப்பை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் விளம்பர நடிகையாகவும் த்ரிஷா தொடர்ந்து இருந்து வருவது ஏன் என்பது தான் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் எழுப்பும் அடிப்படை கேள்வி.

ஆனால், அது பற்றி எந்த விளக்கமும் அளிக்காமல், அப்படியொரு அடிப்படை கேள்வி எழுப்பப்படுவதே தெரியாதது போல் பாசாங்கு செய்துகொண்டு, “நான் பிறப்பால் தமிழச்சி”, “நான் ஜல்லிக்கட்டுக்கு  எதிரானவள் அல்ல” என்று பூசிமொழுகி, நீட்டி முழக்கி, இன்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் த்ரிஷா. அந்த வழவழா கொழகொழா அறிக்கை வருமாறு:

என்னை வாழ வைக்கும் தமிழ் இதயங்களுக்கு இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள். கடந்த ஒரு வாரமாக நான்  செய்யாத தவறுக்காக, ஜல்லிக்கட்டு விஷயத்தில் என்னை மனம் நொந்து போகும் வகையில்  விமரிசித்தும்,  கண்டனம் தெரிவித்தும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

நான் ஜல்லிக்கட்டுக்கு  எதிரானவள் அல்ல என்ற என்னுடைய நிலையை நான் மிக தெளிவாக சமூக வலைத்தளத்தில் என்னுடைய  ட்விட்டர் மூலமாக  தெரிவித்து இருக்கிறேன். நான் பிறப்பால் ஒரு தமிழச்சி, அதில் பெருமை அடைகிறேன். நான் தமிழ் சமுதாயத்தையும், எங்கள் பண்பாட்டையும்  கலாச்சாரத்தையும் பெரிதும் மதிப்பவள். .நான் பிறந்த தமிழ் சமுதாயத்தின் உணர்வுகளுக்கு என்றுமே துணை நிற்பவள். என்றுமே என் வளர்ச்சிக்கு உரமும் ஆக்கமுமாய்  இருந்த தமிழ்  மக்களின் உணர்வுகளுக்கு  எதிர்மறை கருத்துக் கொண்டவள்  அல்ல.

என்னை புரிந்துகொள்ளாமல் என் மீது வீசப்பபடும் கண்டனங்கள் ,மிகவும்   கீழ்த்தரமாக  இருக்கிறது. அவை என்னை மட்டுமின்றி என்னை சார்ந்தவர்களையும் சொல்லொண்ணா துயரத்திலும், மன உளைச்சலிலும் ஆழ்த்துகிறது .இந்த கண்டனங்களை நான் எதிர்கொண்டு , என் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடும அதே நேரத்தில் சில விஷமிகளால் என்னுடைய ட்விட்டர்  ஹேக் செய்யப்பட்டது.

அந்த விஷமிகள் என் ட்விட்டர் வழியாகவே, நான் தமிழ் மக்களை பற்றி சொன்னதாக ஒரு  தவறான கருத்தை பதிவு செய்தனர்.  இதன் மூலம் என்னை தமிழக மக்களிடம் இருந்து பிரிக்கும் எண்ணம் ஈடேறியதாக அவர்கள் எண்ணி இருக்கலாம். அது  நடக்காது என்ற  நம்பிக்கை எனக்கு இருந்தாலும், பிரச்சனையின் வீரியத்தைக் கண்டு நானே என் பாஸ் ஒர்டையும் மாற்றி விட்டு, அதன் தொடர்ச்சியாக என்  ட்விட்டர்  பக்கத்தை, தற்காலிகமாக  de activate செய்து விட்டேன்.

நான் இந்த கடிதத்தை தயார் செய்யும்  வேளையில் கூட எனக்கு ஏன்   இந்த நிலை ஏற்பட வேண்டும், எனக்கு இந்த இன்னல்கள் ஏற்பட காரணகர்த்தாக்கள் யார் என்று யோசித்தவாறே தான் இருக்கிறேன்.

ஆயினும் இந்த சோதனையான காலகட்டத்தில்  எனக்கு ஆதரவாய் இருக்கும் என் சக நடிகர்களுக்கும், என் நலம் விரும்பிகளுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு த்ரிஷா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.