வேலூர் சிறையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார் பேரறிவாளன்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, வேலூர் சிறையில் கடந்த 25 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை, ஆயுள் தண்டனைக் கைதி ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக வேலூர் சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “வேலூர் சிறையில் உயர் பாதுகாப்பு தொகுதியில் பேரறிவாளன் உட்பட 8 கைதிகள் உள்ளனர். இத்தொகுதியில் இருக்கும் ராஜேஷ் கண்ணா என்ற கைதியால் சில பிரச்சினைகள் இருந்துள்ளது. இதனையடுத்து ராஜேஷ் கண்ணாவை வேறு தொகுதிக்கு மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

செவ்வாய்க்கிழமை காலை ராஜேஷ் கண்ணாவை வேறு தொகுதிக்கு அழைத்துச் செல்ல காவலர்கள் வந்தபோது அருகில் இருந்த பேரறிவாளன் மீது ராஜேஷ் கண்ணா எதிர்பாராத தாக்குதல் நடத்தியுள்ளார். இரும்புக் கம்பியைக் கொண்டு தலையில் தாக்கியுள்ளார். இதில் பேரறிவாளனுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு மருத்துவர்கள் தலையில் 4 தையல் போட்டனர். தற்போது அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார்” என்றார்.

பேரறிவாளனை தாக்கிய ராஜேஷ் கண்ணா என்ற ராஜேஷ் குமார் (வயது 41) மதுரையைச் சேர்ந்தவர். கடந்த 2001ஆம் ஆண்டு செம்பியம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த கடத்தல் மற்றும் கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்றவராவார்.

இதற்கிடையில் பேரறிவாளன் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்து வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி முகமது ஹனீபா, எஸ்.பி. சண்முக சுந்தரம் ஆகியோர் சிறையில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேலூர் சிறைக்கு விரைந்துள்ளார்.