“தனித்தொகுதி எம்எல்ஏ.க்கள், எம்பி;க்கள் பட்டியலின மக்களின் பிரச்சனையை பேசுவதில்லை!” – பா.இரஞ்சித்

அம்பேத்கர் நினைவுநாளை முன்னிட்டு ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்திற்கு பாராட்டு விழா சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், இந்திய குடியரசு கட்சியின் தலைவர் சே,கு தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் பா.இரஞ்சித் பேசியதாவது:

இன்றும் நாம் கூட்டம் போட்டு சமத்துவம், சகோதரத்துவம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நம் ஊரில் பட்டியலின மக்களுக்குள் பிரிவினையை உண்டாக்கும் வேலைகளையும், சாதிவெறியை தூண்டிவிடும் வேலைகளையும் மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் நடைபெற்ற பட்டியலின மக்களின் படுகொலைகளைப் பற்றி பேசுவதற்க்கு கூட இங்கு தலித் கட்சியினரும், கம்யூனிஸ்ட் தோழர்களும் மட்டுமே வருகிறார்கள். ஆனால் தனி (ரிசர்வ்) தொகுதிகளில் பட்டியலின மக்களின் வாக்குகளைப் பெற்று இன்று எம்,எல்,ஏக்களாக எம்,பிக்களாக இருப்பவர்கள் ஒரு சின்ன கண்டன அறிக்கைக்கூட விடுவதில்லை.  எந்த மக்களின் ஓட்டுகளை வாங்கி அதிகாரத்திற்கு வந்தார்களோ அந்த மக்களை கண்டுகொள்வதுமில்லை .

நம்மை கண்டுகொள்ளாத இவர்களுக்கு நாம் ஏன் நமது வாக்குகளை செலுத்த வேண்டும்? நமக்காக களத்தில் நிற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட  கட்சிகளுக்கு நமது வாக்குகளை வரும் தேர்தல்களில் செலுத்துவோம்.

ஓட்டுரிமை மட்டும் இல்லையென்றால் நம்மை மனித இனமே இல்லை என்கிற நிலைக்கு கொண்டுவந்துவிடுவார்கள். அம்பேத்கர் நமக்கு அளித்த வாக்குரிமையை வரும் தேர்தலில் சரியாக பயன்படுத்துவோம்.

என்னை “நாலு சினிமா படத்தை எடுத்துவிட்டு ரொம்ப பேசுகிறான்” என்கிறார்கள். நான் சினிமாவே எடுக்காவிட்டாலும் பேசுவேன். ஏனென்றால் சாதி என்னோடு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதை நான் வெட்டிவிட நினைக்கிறேன். என்னை தொடர்ந்துவரும் சாதிக்கு எதிராக நான் தொடர்ந்து பேசுவேன்.

இவ்வாறு பா.இரஞ்சித் பேசினார்.

முன்னதாக நிகழ்ச்சியில்  யாக்கன் எழுதிய “கழுவப்படும் பெயரழுக்கு” என்கிற புத்தகம் வெளியிடப்பட்டது. அம்பேத்கர் என்கிற பெயர் பார்ப்பனருடையதா என்கிற கேள்விக்கு, அந்த பெயர் பார்ப்பனருடையது அல்ல என்பதை  சரியான ஆதாரத்தோடு விளக்கும் இந்த புத்தகத்தை ஆம்ஸ்ட்ராங் வெளியிட பா.இரஞ்சித்தும், மாரிசெல்வராஜும் பெற்றுக்கொண்டார்கள்.