“முதல் பட வாய்ப்பு கொடுக்கும் தயாரிப்பாளர் தான் இயக்குனரின் முதல் கதாநாயகன்!”

ஜுபின் இசையில் குமரன் எழுதி இயக்கிய ‘ஒரு காதலின் புதுப்பயணம்’ ஆல்பத்தின் வெளியீட்டு விழா பிரசாத் ஆய்வுக்ககூடம் திரையரங்கில் நடைபெற்றது. ஆல்பத்தை இயக்குனர் பொன்ராம் வெளியிட்டார். நடிகர்கள் மைம் கோபி, பிரஜின், நிஷாந்த், தயாரிப்பாளர் இளையஅரசன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் இயக்குநர் பொன்ராம் பேசுகையில், “இந்த குமரன் என்னிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு வந்தார். அப்போது வாய்ப்பு  தர முடியவில்லை .அடுத்த படத்துக்கு பார்க்கலாம் என்றேன். ஆனால் அடுத்து இப்படி ஒரு வாய்ப்பு வந்து இருக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. புதிய படமும் வந்து விட்டது. ஒருவரை நம்பி பட வாய்ப்பு கொடுப்பது என்பது சாதாரணம் அல்ல. முதல் பட வாய்ப்பு கொடுக்கும் தயாரிப்பாளர் தான் நமக்கு கதாநாயகன் – ஹீரோ.எல்லாமே. அதை மறந்துவிடக் கூடாது.

இந்த நான்கு நிமிட பாடல் ஆல்பத்தைப் பார்த்தேன். நல்ல வேளை, இரண்டு முறை போட்டார்கள்.  அதற்குள் பாடல், கதை, காட்சியழகு எல்லாமே இருந்தன. இது மாதிரி ஆல்ப முயற்சி தன்னை சோதித்துக்கொள்ளும் ஒரு முயற்சிதான். ராஜேஷ் கூட ஒரு காட்சியை மாதிரிக்கு எடுத்துக்காட்டி விட்டுத் தான் படவாய்ப்பை பெற்றார். திரையிட்டபோது இதை முதல் முறை பாடலாகப் பார்த்தேன். இரண்டாவது முறை அதில் இருந்த கதையைப் பார்த்தேன். இந்த ஆல்பம் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்” என்று கூறி வாழ்த்தினார்.

0

இயக்குநர் குமரன் பேசும்போது, “நான் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டது இந்த ஒரு நாளுக்காகத்தான். கல்லூரிப் படிப்பு முடிந்து, உதவி இயக்குநராகவும் முடியாமல் இருந்த போது என் அம்மா, அப்பா இருவருமே, பிடிச்சதை  நீ பண்ணுடா, நாங்க உனக்கு உதவி செய்கிறோம் என்றார்கள். அதை என்னால் மறக்க முடியாது ‘வயோல்’ குறும்படம் நிறைய விருதுகள் பெற்றது.

இந்த ஆல்பத்தை தயாரிக்க முன்வந்த ரெஜினா பிக்சர்ஸ் ரெக்ஸை மறக்க முடியாது. நாயகன் ரெக்ஸ், நாயகி பார்வதி இருவரையும் எதுவுமே தெரியாமல் வாருங்கள் என்று தான் கூப்பிட்டேன். அப்படி வந்து இப்படி அழகாக நடித்துவிட்டார்கள். பூஜையே போடாமல் என் அடுத்த படம் இந்த ஆல்ப அறிவிப்புடன் தொடங்கிவிட்டது. அதற்கு உழைக்க இந்த நிமிடத்திலிருந்தே தொடங்கி விட்டேன்’ என்றார்.

விழாவில் ‘பழைய வண்ணாரப் பேட்டை’ இயக்குநர்  ஜி.மோகன்,ஆல்பம் நாயகன் ரெக்ஸ், நாயகி பார்வதி, இசையமைப்பாளர் ஜூபின், நடிகர்கள் மைம் கோபி, ஆடுகளம் நரேன், நடன இயக்குநர் சுஜாதா, ஒளிப்பதிவாளர் அர்ஜுன், எடிட்டர் தீபக், கலை இயக்குநர் ராஜா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆல்பம் வெளியீட்டு விழாவிலேயே இயக்குநரின் அடுத்த பட அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அனாமிகா பிக்கர்ஸ் சார்பில் ‘பழைய வண்ணாரப் பேட்டை’ படத்தை விநியோகம் செய்த இளைய அரசன், ஹன்சிகா எண்டர்டெய்ன் மெண்ட்ஸ் சார்பில் புதிய படத்தை தயாரிக்கிறார்.  குமரன் இயக்கத்தில் பிரஜின், நிஷாந்த் நடிக்கிறார்கள்.