காதலர் தினத்தன்று வெளியாகும் ‘ஓ மை கடவுளே’ படத்தில் கடவுள் – விஜய் சேதுபதி!

வருகிற (பிப்ரவரி) 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள படம் “ஓ மை கடவுளே”. இது சென்சார்போர்டில் U/A சர்டிஃபிகேட் பெற்றுள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவினர் பேசிய பேச்சு விவரம்:
தயாரிப்பாளர் அபிநயா செல்வம்:
நானும் தம்பி அசோக்கும் சிறுவயதில் இருந்தே நிறைய சேட்டைகள் செய்திருக்கிறோம். அவனுடைய கிரஷ்ஷிடம் எப்படி பேச வேண்டும் என்று கூட அவனுக்கு சொல்லி தந்துள்ளேன். என் வாழ்வில் எப்போதும் உடனிருப்பவன். அவனுடன் இந்தப்படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் எங்கள் வாழ்வில் முக்கியமான படம். அனைவருக்கும் பிடிக்க்க்கூடிய படமாக எடுத்திருக்கிறோம். பார்த்துவிட்டு சொல்லுங்கள் நன்றி.
நிர்வாக தயாரிப்பாளர் நோவா:
சினிமாவில் ஜெயிக்கும் அதேநேரம் மனதுக்கு பிடித்த படத்தை செய்ய வேண்டும் என நினைக்கும் டீம் நாங்கள். நண்பர்களாக இணைந்து இந்தப்படத்தை எடுத்திருக்கிறோம். நண்பர்கள் எப்போதும் தோற்பதில்லை. இந்தப்படம் கண்டிப்பாக ஜெயிக்கும். நன்றி.
ஒளிப்பதிவாளர் விது அயன்னா:
இது என்னோட மூன்றாவது படம். மேயாத மான், எல்கேஜி என ஒவ்வொரு படமும் வேறு வேறு ஜானர். காதல் படம் என்றால் எனக்கு பிடிக்கும். இதுவும் காதல் படம் என்பதால் நான் ஒத்துக்கொண்டேன். இயக்குநர் மிகத் தெளிவானவராக இருந்தார். விஷுவல் நன்றாக இருப்பதாக பார்த்தவர்கள் சொன்னார்கள். எல்கேஜி படத்தை ரிலீஸ் செய்த டீம் மீண்டும் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார்கள். அது எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி நன்றி.
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்தி:
டில்லிபாபு சாரை முதலில் பார்த்தபோது நீங்கள் தான் இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும். பிஸுனஸ் விஷயம் எல்லாம் அப்புறம் பார்த்துகொள்ளலாம் என்றார். படம் அருமையாகவே இருந்தது. கடைசியாக சில்லுகருப்பட்டி ரிலீஸ் செய்தேன். அதே மனதுடன் நேர்மறை தன்மையுடன் இந்தப்படத்தையும் ரிலீஸ் செய்கிறேன். இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவரும் ஒரு டீமாக எந்த ஈகோவும் இல்லாமல் வேலை செய்துள்ளார்கள். சந்தோஷமான மனதுடன் இந்தப்படத்தை ரிலீஸ் செய்கிறேன் நன்றி.
நடிகர் சாரா:
இது கிட்டதட்ட என்னோட ரூம்மேட்கள் சேர்ந்து எடுத்த படம். எல்லோரும் சேர்ந்து வேலை செய்தது மிக மகிழ்ச்சி. படப்பிடிப்பு நார்மலாகவே இருக்காது நண்பர்கள் சேர்ந்தால் நடக்கும் கலாட்டா எல்லாமே நடக்கும். ஹீரோயின் ரித்திகாவுடன் கேரளாவில் படப்பிடிப்பில் இருந்தேன். மிக எளிமையானவர் தானே மேக்கப் போட்டுக்கொண்டு இயல்பாக ஹீரோயின் எனும் பந்தாவே இல்லாமல் இருந்தார். பாடல்கள் அருமையாக வந்துள்ளது. படம் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகை வாணி போஜன்:
ஒரு படம் செய்யும்போது அந்தப்படத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் அந்தப்படம் பிடித்திருக்க வேண்டும். இந்தப்படம் அப்படிபட்ட படம். நான் பார்ப்பவர்களிடம் எல்லாம் முதலில் “ஓ மை கடவுளே” ரிலீஸ் ஆக வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். எல்லோரும் கேட்டார்கள் அப்படி என்ன படம் அது என்று. இது எங்கள் படம் நாம் தான் தயாரிப்பாளர் போல் இருக்கிறோம் என்று அசோக்கிடம் சொன்னேன். எல்லோரும் நண்பர்கள் போல் இணைந்து இந்தப்படத்தை எடுத்துள்ளோம். கண்டிப்பாக இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகை ரித்திகா சிங்:
இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படம். மூன்று வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு வந்துள்ளேன். இப்படக்குழு அனைவரும் என் மீது மிகப்பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். தயாரிப்பாளர் அபிநயா என்னுடைய சகோதரி போல் மாறி விட்டார். இயக்குநர் அஷ்வத் மிகத் தெளிவானவர். காட்சிகள் எப்படி வர வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். சாரா மிகச்சிறந்த நண்பர், மிக கலகலப்பானவர். வாணி போஜன் மிக எளிமையானவர், மிக அழகானவர் அவர் என் சகோதரி போல் அன்பு செலுத்தினார். அசோக் செல்வன் மிகமிக ஆதரவாக இருந்தார். ஒரு நண்பனாக எந்த ஈகோவும் இன்றி கூட இருந்தார். அவர் போல பெண்களுக்கு துணையாக ஆண்கள் உலகில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தப்படம் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் எல்லோரும் பார்த்து ரசியுங்கள் நன்றி.
தயாரிப்பாளர் டில்லிபாபு:
எங்கள் படங்களுக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி. நாங்கள் பெரிய பட்ஜெட் படம் எடுப்பதில்லை. சின்ன படஜெட் படங்கள் தான் எடுக்கிறோம். அது நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்கு ஆதரவு தந்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. எங்கள் கம்பனியில் வித்தியாசமான படங்கள் எடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு. “ராட்சசன்” படத்திற்கு பின்னர் அடுத்து என்ன செய்யலாம் எனும்போது அஷ்வத் சொன்ன கதை எங்களுக்கு பிடித்தது. உடனே முடிவு செய்து இப்படத்தை ஆரம்பித்தோம். இப்படம் நம் வாழ்வில் நடக்கும் கதைதான் ஆனால் அதை சொல்லும் விதத்தில் நேர்த்தி இருக்கும். இயக்குநர் அழகாக இயக்கியுள்ளார். ரித்திகா சிங் தான் இந்தக்கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று விரும்பினோம். அவரும் மிகுந்த ஒத்துழைப்பு தந்தார். அசோக் செல்வனுக்கு இந்தப்படம் முக்கியமான படமாக இருக்கும். அவருடைய திறமை இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை என்றே சொல்வேன். அவர் இன்னும் பல உயரங்கள் செல்வார். வாணி போஜனை தமிழில் அறிமுகப்படுத்துவதில் பெரிய மகிழ்ச்சி. சாரா எனக்கு மிகவும் பிடிக்கும் அவர் இந்தப்படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருக்கிறார். இந்தப்படம் பார்ப்பவர்கள் அனைவருக்கும் சாராவை பிடிக்கும். விஜய் சேதுபதி மிகுந்த ஆதரவாக இருந்து நடித்து தந்தார். சக்தி ஃபிலிம் ஃபேக்டரிக்கு இந்நேரத்தில் நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன். அவருக்கு படம் காட்டினேன் அவருக்கு படம் பிடித்திருந்தது. கட்டிப்பிடித்து பாராட்டினார். பாடல்கள் மற்றும் டிரெயலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படமும் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.
இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ்:
ஒரு சூப்பரான ஃபிரஷ்ஷான டீமுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. இது ஒரு ஃபேண்டஸி ரோம் காம் ஸ்டோரி. அஷவத் மிகத்தெளிவாக எழுதுபவர். அற்புதமான படைப்பாளி. மிகத்திறமை வாய்ந்தவர். இந்தப்படம் ரசிகனாக என்னை அதிகமாக கவர்ந்திருக்கிறது. இதில் எட்டு பாடல்கள். படம் எல்லோருக்கும் விருந்தாக இருக்கும் நன்றி.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து:
இந்த மேடை நெடுநாளைய கனவு. நான் சினிமா எடுப்பேன் என அம்மா, அப்பா நம்பவில்லை. என் குறும்படம் ஒன்றை பார்த்தபிறகு தான் நம்ப ஆரம்பித்தார்கள். இப்போது வரை பெரிய ஆதரவாக உள்ளார்கள். இந்த மேடையில் இருப்பவர்கள் அனவருமே எனது நெருங்கிய நண்பர்கள். அவர்களால் தான் இந்தப்படம் நடந்தது. தயாரிப்பாளர் டில்லிபாபு இல்லை என்றால் இந்த மேடை இல்லை. இந்த டீமில் இருக்கும் அனைவருமே தங்கமான மனிதர்கள். வாணி போஜன் கேரக்டருக்கு நிறைய பேரை அணுகினோம் ஆனால் அக்கா எனும் வார்த்தையால் யாரும் செய்ய மாட்டேன் என்றார்கள். ஆனால் வாணி போஜன் அவரே முன்வந்து இந்தக்கதாப்பாத்திரத்தை செய்தார். அவர் இந்தப்படத்திற்கு பிறகு எல்லோருடைய கிரஷ்ஷாக மாறி விடுவார். ரித்திகா சிங் இறுதிசுற்றுக்கு பிறகு இந்தப்படத்தில் அனைவருக்கும் அவரைப்பிடிக்கும். அசோக் என் மச்சான் நாளைய இயக்குநரிலிருந்து தெரியும். நான் என்ன சொன்னாலும் செய்வேன் என சொல்பவர். அவரது முழுத்திறமையை இப்படம் வெளியில் காட்டும். இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் அசோக் செல்வன்:
ரொம்ப நாள் கழித்து உங்களை சந்திக்கிறேன். என் அக்கா அபிநயா செல்வம் பிரில்லியண்ட். என்னுடைய பெஸ்ட் ஃபிரண்ட். ஆனால் மிகப்பெரும் தைரியமாக படத்தை எடுத்திருக்கிறார். அஷ்வத் என் நண்பன். மிகச்சிறப்பாக எழுதும் திறமை இருக்கிறது. ராட்சசன் போன்ற படத்திற்கு பிறகு எங்களுடன் இணைந்து படம் செய்ததற்கு டில்லிபாபு சாருக்கு நன்றி. காதல் படத்திற்கு இசை வெகு முக்கியம் லியான் ஜேம்ஸ் பாதி படம் முடிந்த பிறகு தான் உள்ளே வந்தார். ஆனால் அத்தனை அற்புதமாக இசையமைத்துள்ளார். சாராவை முதலில் நான் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் படம் பார்த்த பிறகு அவர் தான் மனதில் நின்றார். சினிமாவில் பணம் சம்பாதிக்க ஆசை இல்லை அதனால் தான் இந்த பெரிய இடைவெளி. எனக்கு நிறைய வித்தியாசமான கேரக்டர், கதைகள் செய்ய ஆசை. இப்போது காதல் கதைகள் எதுவும் வருவதில்லை அதனால் இந்தப்படம் செய்யலாம் எனத் தோன்றியது. எனக்கு பிடித்து ஆசைப்பட்டு செய்த படம் உங்களுக்கும் பிடிக்கும். அஷ்வத் 8 வருடம் ஒன்றாக பயணிக்கும் நண்பன். அஷ்வத் இந்தப்படம் செய்கிறான் என்பதால் எனக்கு பயமே இல்லை அந்தளவு முழுமையாக அவனை நம்புகிறேன். படத்தில் முக்கியமான பாத்திரம் ஒன்னு இருக்கு. அதுக்கு விஜய் செதுபதி அண்ணாகிட்ட கேட்டோம். நான் நல்லா வர வேண்டும் என்று மனதார நினைப்பவர். கதையே கேட்காமல் எனக்காக நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கு பெரிய மனசு எளிமையா வந்து நடிச்சு கொடுத்திட்டு போயிட்டார். விஜய் சேதுபதி இந்தப்படத்தில் கடவுளாக நடிக்கிறார். மற்றதெல்லாம் திரையில் பாருங்கள் நன்றி.