’ஓ மை கடவுளே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி!

அசோக் செல்வன், ரித்திகா சிங் இணைந்து நடிக்கும் ’ஓ மை கடவுளே’  திரைப்படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருக்கிறார். ஒரு சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் அவர் நடித்துள்ளார்.

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இது பற்றி கூறுகையில், “சிறப்புத் தோற்றம் என்பதை விட என்னைப் பொறுத்தவரை இது படத்தை மாற்றும் முக்கிய கதாபாத்திரம் என்பேன். அவர் படத்தில் வரும் நேரம்  படத்தின் முக்கியமான கட்டமாக, படத்தை அடுத்த உயரத்துக்கு எடுத்துச் செல்வதாக இருக்கும்.

திரைக்கதை முடிக்கப்பட்டு முக்கிய நடிகர்களின் தேர்வுகள் முடிந்த பிறகு இந்தப்பாத்திரத்தில் நடிப்பதற்கு ஏற்ற ஒருவரை தேடினோம். மிகப் பிரபலமாக இருக்கும் அதே நேரம், கேரக்டரில் எளிமையை நிஜத்தை பிரதிபலிக்க வேண்டும். இறுதியாக அசோக் செல்வன் மூலம் விஜய் சேதுபதியிடம் கதையை, கேரக்டரை பற்றி  விவரித்தேன் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டு வாழ்த்தினார்.

இந்தக் கேரக்டர் படத்தில் வருவது சிறிது நேரமாக இருக்கலாம் ஆனால் ரசிகர்கள்  மனதில் மிக நெருக்கமாக உணரக்கூடியதாக இருக்கும். சினிமாவில் பெரு வெற்றிகள் மூலம்  தமிழக மக்களின் அன்பை அள்ளியிருக்கும் விஜய் சேதுபதி எங்கள் படத்தில் இணைந்ததில் மொத்த படக்குழுவுக்கும் மகிழச்சி. அவருக்கு இத்தருணத்தில்  நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

’ஓ மை கடவுளே’ இன்றைய நகர்புற மேல்தர வர்க்கத்து காதலை இயல்பாக சொல்லும்  காதல் – காமெடி படமாக இருக்கும். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. படத்தின் அனைத்து ஷூட்டிங் பணிகளும் முடிந்து படத்தின்  இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் இசை மற்றும் பட வெளியீட்டு தேதிகள்  மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

லியான்  ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.   மேயாத மான், எல்கேஜி புகழ் விது அயன்னா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்” என்றார்.