“தமிழகத்தில் பாஜக ஒருபோதும் காலூன்ற முடியாது!” – மு.க.ஸ்டாலின்

அம்பேத்கரின் உணர்வும், லட்சியமும் இருக்கும் வரை தமிழகத்தில் ஒருபோதும் பாஜகவால் நிச்சயம் காலூன்ற முடியாது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

அம்பேத்கரின் 127-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக அரும்பாடுபட்டவர் புரட்சியாளர் அம்பேத்கர். அவரது லட்சியம், கொள்கை, கோட்பாடுகள், கனவு அனைத்தும் அதனை மையப்படுத்தியே இருந்தது.

மதவாத சக்திகளை எப்படியாவது தமிழகத்தில் திணித்துவிட வேண்டும் என மத்தியில் உள்ள பாஜக அரசு பல்வேறு வகைகளில் முயற்சித்து வருகிறது. அம்பேத்கரின் உணர்வும், லட்சியமும் இருக்கும் வரை தமிழகத்தில் ஒருபோதும் பாஜகவால் நிச்சயம் காலூன்ற முடியாது” என்றார்.