நிர்பயா (ஜோதி) வழக்கு: குற்றவாளி களுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

டெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி நிர்பயா (என அடையாளப்படுத்தப்படும் ஜோதி சிங்) கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் டெல்லி நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இதில் அவர் சிகிச்சை பலனின்றி 13 நாட்களுக்குப் பின்னர் பலியானார்.

0a

இந்த வழக்கில் குற்றவாளிகள் என நிரூபணமான ராம் சிங், அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதில் 6வது நபர் இளம் குற்றவாளி என்பதால், அவர் சிறார் பள்ளியில் அனுமதிக்கப்பட்டு 2015-ல் விடுதலையானார்.

முக்கிய குற்றவாளியான ராம்சிங் 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் திகார் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.

குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பச் சூழ்நிலையையும் அவர்களின் இளம் வயதையும் கருதி அவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்ற வாதத்தை முன்வைத்தனர்.

ஆனால், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் தண்டனைகளை வலுவாக்க வேண்டும் என மகளிர் அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளித்துள்ளது.

அப்போது நீதிபதிகள், “இந்த வழக்கு அரிதினும் அரிதானது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட கடுமையான காயங்களையும், இந்தக் குற்றம் நிகழ்த்தப்பட்ட கொடூரமான முறையையும் கருத்தில் கொண்டு கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது. குற்றவாளிகளுக்கு கருணை காட்டுவது என்ற வாதத்துக்கே இடமில்லை. குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது” என்றனர்.

நீதிபதி தீபக் மிஸ்ரா கூறும்போது, “இந்த வழக்கில் சிசிடிவி ஆதாரம் வலுவான சாட்சியாக இருக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் மரண வாக்குமூலம் கிரிமினல் சதியை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்கிறோம்” என்றார்.