“வேலை நிறுத்தம் தொடர வேண்டாம்!” – மன்சூர் அலிகான்

ஃபெப்ஸி வேலை நிறுத்தம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கை:

இன்று தயாரிப்பாளர்களுக்கும் பெப்ஸி தொழிலாளர்களுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக வேலை நிறுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தயாரிப்பாளர்கள், விஷால் போன்ற நடிகர்கள் நிறைய பேருக்கு தானம் தர்மம், உதவி செய்து கொண்டிருபவர்கள். உழைக்கும் தொழிலாளர்களுக்கு அதிகமாக சம்பளம் கொடுப்பதெல்லாம் பெரிய விஷயம் அல்ல. ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நுற்றுக்கணக்கான தயாரிப்பாளர்கள் படம் எடுத்து அனைத்தையும் இழந்தவர்கள். தனக்கு கீழ் வேலை செய்யும் ஒரு தொழிலாளி எப்படி படப்பிடிப்பை நிறுத்தலாம் என்று ஆவேசப்படுகிறார்கள், முடிவெடுகிறார்கள் விஷால் என்பவரது தனிப்பட்ட முடிவு அல்ல.

ஒவ்வொருத்தரும் இன்னொருத்தரை சார்ந்தது தான் சினிமா. யாரோ ஒரு தொழிலாளி  செய்த தவறுக்காக  25000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது.

நானே, ஒரு சிலர் தொழிலாளர்கள் செய்த தவறினால் தான் நீதிமன்றத்திற்கு சென்று நியாயம் பெற்று. டாப்சி என்ற அமைப்பை ஆரம்பிக்க நேர்ந்தது. அந்த அமைப்பு மிக மிக சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு உதவிக்கொண்டு இருக்கிறது. வெறும் நானூறு, ஐந்நூறு தொழிலார்களை கொண்டு அமைக்கப்பட்ட புதிய அமைப்பு அது. எத்தனை குட்டி கர்ணம் போட்டாலும் பெப்ஸி தொழிலாளர் அமைப்பிற்கு ஈடாகாது.

நானே அனைத்து பெப்ஸி தொழிலார்கள் கூடத்தான் வேலை செய்துகொண்டிருக்கிறேன். நான் எனது கூலியை வாங்கி செல்கிறேன், அவர்கள் அவர்களது கூலியை வாங்கி செல்கிறார்கள்.

ஏற்கனவே தமிழகம் முழுக்க வெளிமாநில தொழிலாளர்கள் அனைத்து துறைகளிலும் வேலை செய்கிறார்கள். தமிழர்களுக்கு வேலை இல்லை. இது சினிமாவிலும் தொடர்ந்தால் எப்படி?  நமது கண்ணை நாமே குத்திக்கொள்ள கூடாது. ‘பாகுபலி’ படத்தை பார்த்து இரண்டாம் நாளே சொன்னேன் ஆந்திரா, கர்நாடகாவில் எடுக்கப்பட்ட படம், தமிழ் சிறப்பாக பேச தெரிந்த இயக்குனர் ராஜமௌலி தமிழ்நாட்டில் ஒரு பகுதியாவது எடுத்திருக்க கூடாதா, பல்லாயிரக்கணக்கான தமிழக பெப்ஸி  தொழிலாளர்களுக்கு வேலை  கிடைத்திருக்குமே என்று ஆதங்கத்தை கூறினேன்..கதறினேன்.

ஏற்கனவே பணச் செல்லாமை, ஜி.எஸ்.டி., வறட்சி, மழையின்மை, நதிநீர் கிடைக்காமையால்  விவசாயிகள், நெசவாளிகள், சிறு,குறு தொழிலாளர்கள் என தமிழகமே பதிகப்பட்டுள்ளது. சிறந்த தொழில்நுட்பம், கடுமையான உடல் உழைப்பு ஆகியவற்றை கொடுத்து ஹாலிவுட் தரத்தை மிஞ்சும் சண்டைகாட்சி நிபுணர்களை, ஆர்ட் டைரக்டர்களை, தொழிலாளிகளை  கொண்டது நமது பெப்ஸி அமைப்பு அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது. தயவு செய்து வேலை நிறுத்தம் வேண்டாம்..

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.