“பார் புகழும் பாரதத்தில்” எளிய மனிதனுக்கு இதுதான் கதி!

ஒடிசா மாநிலம், காலாகேண்டி அருகே உள்ள மெல்கர் எனும் கிராமத்தில் வசித்து வருபவர் தானா மஜ்கி. காசநோயினால் பாதிக்கப்பட்ட இவருடைய மனைவி அமங் டே (வயது 42) பவானிபாட்னாவில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த செவ்வாய் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தானா மாஜ்கி இறந்த தனது மனைவியின் உடலை சொந்த கிராமத்திற்கு எடுத்துச் செல்ல வாகனம் (அமரர் ஊர்தி) ஏற்பாடு செய்யும்படி மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார். ஆனால் இதற்கு மருத்துவமனை ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.

வேறுவழியின்றி, மஜ்கி இறந்த மனைவியின் உடலை போர்வையால் சுற்றி தோளில் சுமந்துவாறு தனது 12 வயது மகளுடன் நடந்து சென்றிருக்கிறார். தானா மஜ்கியின் கிராமம் மருத்துவமனையில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சுமார் 10, 12 கிலோ மீட்டர் தொலைவு கடந்ததும், உள்ளூர் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இத்தகவல் கிடைத்து விரைந்து வந்து மஜ்கியிடம் விசாரித்தனர்.

“நான் மிகவும் ஏழை மனிதன் என்றும், என்னால் இறந்த மனைவியை கொண்டு செல்ல வாகனம் தயார் செய்ய முடியாது என்றும், மருத்துவமனை அதிகாரிகளிடம் கூறினேன். எந்த உதவியும் செய்ய முடியாது என்று அவர்கள் கூறிவிட்டனர்” என்று மஜ்கி அவர்களிடம் கூறினார்.

உடனடியாக அந்த தொலைக்காட்சி செய்தியாளர்கள் மாவட்ட கலெக்டரை தொடர்புகொண்டு,  மீதமுள்ள தூரம் கொண்டு செல்ல வாகனம் ஏற்பாடு செய்தனர்.

இறந்த மனைவியை கொண்டு செல்ல வாகனம் கிடைக்காமல் சாலையில் தோளில் சுமந்துகொண்டு சென்ற கணவர் பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

https://youtu.be/3pBSMK9BKEo