மக்களவை தேர்தல் முடிவுகள்: ஆளும் பாஜகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை!

மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியின் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மேலும், எந்த ஒரு தனிக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு பாராளுமன்றம் அமைகிறது.

 நாடு முழுவதும் மக்களவை பொது தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம்உள்ள 543 தொகுதிகளில் குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜகவேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், பெரும்பாலான தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவியது.

இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. உத்தர பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில், உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் 3.90 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், கேரளாவின் வயநாடு தொகுதியில் 3.64 லட்சம் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார்.

மத்தியில் ஆட்சி அமைக்க 272எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஆளும் பாஜகவுக்கு தனித்து அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றிருப்பது, பாஜகவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. மேற்கு வங்கத்திலும் பாஜகவுக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை.

எனினும், ஒடிசா, தெலங்கானா, கர்நாடகாவில் கணிசமான தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி 74,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்க முயன்று வருகிறது.  இ ந்த புதிய அரசில், நிதிஷ் குமாருக்கு துணை பிரதமர் பதவியும், சந்திரபாபு நாயுடுவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

கணிப்புகள் பொய்த்தன:  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் கடந்த 1-ம் தேதி மாலை வெளியாகின. ‘பாஜக கூட்டணி 350 – 415 தொகுதிகளை கைப்பற்றும், இந்தியா கூட்டணிக்கு 150 தொகுதிகள் வரை கிடைக்கும்’ என்றே பெரும்பாலான கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், கணிப்புகளை பொய்யாக்கி இந்தியா கூட்டணி 230 தொகுதிகளைத் தாண்டியுள்ளது.