2026 சட்டப்பேரவை தேர்தலில் களம் காணப் போவதாக நடிகர் விஜய் சூசக அறிவிப்பு!

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘லியோ’ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினரும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும், விஜய்யின் அம்மா ஷோபாவும் பங்கேற்றனர். ஆனால், எதிர்பார்த்தது போலவே விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன், விஜய்யின் மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்ய சாஷா ஆகியோர் பங்கேற்கவில்லை.

இவ்விழாவில் விஜய் பேசியதாவது:

“என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா… நண்பி. இவ்ளோ நாள் நான் தான் உங்கள என் நெஞ்சுக்குள்ள வச்சுருகேன்னு நினைச்சேன். இப்போது தான் உங்கள் இதயத்தில் எனக்கு ஒரு பெரிய இடத்தைக் கொடுத்து உள்ளீர்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். என்னோட தோலை செருப்பாக தைத்து கொடுத்தாலும் உங்கள் அன்புக்கு ஈடாகாது. நான் உங்களுக்கு என்றும் உண்மையாக இருப்பேன். சமீப காலமாக சமூக வலைதளங்களில் உங்களது கோபம் அதிகமாக உள்ளது. ஏன்? இவ்வளவு கோபம் உடம்புக்கு நல்லதில்லை. அதெல்லாம் வேண்டாம் நண்பா. நாம் யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். அது நம்முடைய வேலையுமில்லை. நமக்கு நிறைய வேலை இருக்கிறது.

ஒரு காட்டுக்கு ரெண்டு பேர் வேட்டைக்கு போறாங்க. அந்த காட்டுல மான், மயில், முயல், இந்த காக்கா, கழுகு. காடுன்னு இருந்தா இதெல்லாம் இருக்கும் தானே. அதுக்கு சொன்னேன் பா. ஒருத்தர் வில் அம்பு எடுத்து போறார். உன்னொருத்தர் ஈட்டி எடுத்து போறார். வில் எடுத்து போனவர் முயல அடிச்சி தூக்கிட்டாரு. ஈட்டி வைத்திருந்தவர் யானைய குறி வெச்சு மிஸ் பண்ணிட்டார். ரெண்டும் பேரும் ஊருக்கு திரும்பி வருவாங்க. இதுல யாருக்கு வெற்றி? அந்த யானைய குறி வைத்தவர் தான் வெற்றி அடஞ்சவர். ஏன்னா, நம்மால் எதில் எளிதாக வெல்ல முடியுமோ அதை செய்வது வெற்றி அல்ல. எது முடியாதோ அதை செய்வது தான் வெற்றி. முயற்சியாவது செய்ய வேண்டும். பெரிதினும் பெரிது கேள். ஆசைப்பட வேண்டும். அதில் என்ன தப்பு இருக்கு.

படத்துல வர பாட்டுல ‘விரல் இடுக்குல தீ பற்றணும்னு’ எழுதியிருக்காங்க அத பேனா என்று எடுத்துக்கொள்ளலாம். அதேபோல ‘பத்தாது பாட்டில்’ என்று எழுதியிருக்கிறார்கள். அதை ஏன் சரக்கு என எடுத்துக் கொள்ள வேண்டும். கூல் டிரிங்க் என்று எடுத்துக் கொள்ளலாம் இல்லையா?. இப்படியான மழுப்பலான கதையெல்லாம் சொல்லி நான் எஸ்கேப் ஆக தேவையில்லை. தயவு செய்து, சினிமாவை சினிமாவாக பாருங்கள். பள்ளி கல்லூரி போகிற வழியில் ஒயின் ஷாப் இருக்கு. ரெண்டு ரவுண்டு போட்டுவிட்டா ஸ்கூலுக்கு போகிறார்கள்?

ஒரு முறை ஏவிஎம் சரவணன் சார், வடபழனி மெயின் ரோட்டுல கார்ல போனப்போ சிக்னல்ல இருந்த ஒரு அம்மாவுக்கு உதவி செய்திருக்கார். அந்த அம்மா உடனே ’நீ நல்லா இருப்ப எம்.ஜி.ஆர்’-ன்னு சொல்லி இருக்காங்க. அந்த காலத்துல யார் அள்ளிக் கொடுத்தாலும் எம்.ஜி.ஆர் அவர்களா தான் இருக்கும் அப்படின்னு பேர். நாம யாரையும் ஒப்பிட்டு பேசல. நாம அவ்வளவு பெரிய ஆளும் இல்ல. ஆனா, நல்ல விஷயத்த எடுத்துக்கலாம். அந்த வகையில எனக்கு ஒரு குட்டி ஆசை. எதிர்காலத்துல எங்க நல்லது நடந்தாலும் அதை நம்ம பசங்க தான் பண்ணி இருப்பாங்க அப்படின்னு ஒரு பேர் எடுக்கணும்னு எனக்கு ஒரு ஆசை.

சரி, லியோவுக்கு வருவோம். இயக்குநர் லோகேஷ் கனகராஜை எண்ணி பெருமை கொள்கிறேன். ‘மாநகரம்’ நம்மள பாக்க வெச்ச. ‘கைதி’ எல்லாரையும் பாக்க வெச்ச. ‘விக்ரம்’ இந்தியாவையே பாக்க வெச்ச. இப்போ லியோ. இன்னும் ஹாலிவுட் மட்டும் தான் பாக்கி இருக்குன்னு நினைக்குறேன். உன்ன நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு. 20 வயசுல ஹீரோயின் ஆகுறது பெருசு இல்ல. 20 வருஷமா முன்னணி ஹீரோயினா இருக்குறது தான் பெருசு. நம்ம இளவரசி குந்தவை (த்ரிஷா) சூப்பர். சஞ்சய் தத் சார், அர்ஜுன் சார், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் சார்னு இந்த படத்துல அங்கமா இருக்குற எல்லாருக்கும் எனது வாழ்த்துகள்.

அட்லி, லோகேஷ், நெல்சன் எல்லாரும் நம்ம பசங்க. அவங்களை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். அவர்கள் மிக திறமையானவர்கள். அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.

பாருங்க, புரட்சி தலைவர்னா ஒருத்தர் தான். நடிகர் திலகம்னா ஒருத்தர் தான். அதே மாதிரி உலக நாயகன் ஒருத்தர் தான். சூப்பர்ஸ்டார்னா ஒருத்தர் தான். தல-னா ஒருத்தர் தான். நீங்கள் மன்னர்கள். நான் உங்களுக்கு கீழ் இருக்கும் தளபதி. நீங்க ஆணையிடுங்க நான் செய்கிறேன்.

இவ்வாறு விஜய் பேசினார்.

2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு விஜய் தனிக்கட்சி தொடங்கி முதலமைச்சர் வேட்பாளராக தேர்தல் களம் காண இருப்பதாகவும், அது பற்றி லியோ வெற்றி விழாவில் அவர் சூசகமாகவாவது அறிவிப்பார் எனவும் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, முன்தயாரிக்கப்பட்ட (ஸ்கிரிப்ட்டட்) உரையாடல் ஒன்று இந்த விழா மேடையில் நிகழ்த்தப்பட்டது.

அது என்னவென்றால், “2026?” என்று தொகுப்பாளர் கேட்க, அவரது ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்ய, ஒண்ணும் தெரியாத பப்பா மாதிரி விஜய் “2025க்குப் பிறகு 2026 வரும்” என்று பதிலளிக்க, “அது இல்ல சார். 2026ஆம் வருஷம்?” என்று தொகுப்பாளர் கேட்க, “2026ஆம் வருசம் கால்பந்தாட்ட போட்டி” என்று விஜய் அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல, “அதுவும் இல்ல. தமிழ்நாட்டுக்கு வாங்க. 2026ஆம் ஆண்டு?” என்று தொகுப்பாளர் தன் சொந்த மூளையில் உதித்த கேள்வி போல் வினவ, “ஓ அதுவா?” என்று சொல்லும் விஜய்,  ரசிகர்கள் பக்கம் திரும்பி சில வினாடிகள் அமைதியாகப் பார்க்கிறார். ரசிகர்கள் வெறி பிடித்தவர்கள் போல் கத்தி ஆரவாரம் செய்கிறார்கள். விஜய் இப்போது ‘பிகில்’ படத்து வசனம் மூலம் சூசமாக ரசிகர்களை நோக்கி சொல்லுகிறார்: “கப்பு முக்கியம் பிகிலு…!”

விஜய் எதை சூசகமாக சொல்லுகிறார் என்பதை புரிந்துகொண்ட அவரது ரசிகர்கள் இன்னும் கூடுதலான உற்சாகத்துடன், இன்னும் கூடுதலான சத்தத்துடன் ஆர்ப்பரிக்கிறார்கள்.