“அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ் படங்களுக்கு ஒன்றிய அரசு விருது கிடைக்காது!” – யுகபாரதி

திரைப்படத் துறைக்கான ஒன்றிய அரசின் விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. பா.இரஞ்சித் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’, ராம் இயக்கிய ‘பேரன்பு’, வெற்றிமாறன் இயக்கிய ‘வடசென்னை’ போன்ற தரமான நல்ல தமிழ் படங்கள் கூட இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. இயக்குனர்கள் பா.இரஞ்சித், ராம், வெற்றிமாறன் உள்ளிட்ட பெரும்பாலான தமிழ் திரைப்பட கலைஞர்கள் நரேந்திர மோடியின் சங்கித்துவ மதவெறி அரசியலுக்கு எதிரானவர்கள் என்பதாலும், நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் ஒன்றிய ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சியை தமிழக வாக்காளர்கள் படுதோல்வி அடையச் செய்துள்ளனர் என்பதாலும், இவற்றுக்கு பழி வாங்கும் வகையில் பல நல்ல தமிழ் படங்கள் ஒன்றிய அரசு விருதுக்கு தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. இக்கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் பாடலாசிரியர் யுகபாரதி, “நாம் எவ்வளவு நல்ல படங்களாக எடுத்தாலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நம் படங்களுக்கு ஒன்றிய அரசு விருது கிடைக்காது”  என்று கூறியுள்ளார்.

k3

விமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் எஸ்.செல்வகுமார், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பாடலாசிரியர் யுகபாரதி பேசும்போது, “கன்னிராசி’ படத்தை ஒரு தயாரிப்பாளர் தயாரித்த படம் என்பதை விட ஒரு பத்திரிகையாளர் தயாரித்த படம் என்றே சொல்லலாம். தயாரிப்பாளர் நிறைய பத்திரிகைகளில் வேலை செய்துள்ளார். இது போன்ற படங்களை இயக்குநர் முத்துக்குமரன் நிறைய தர வேண்டும். ஒன்றிய அரசின் விருது வாங்கும் அளவிற்கெல்லாம் படங்கள் தேவையில்லை. ஏன் என்றால் நாம் எவ்வளவு நல்ல படங்களாக எடுத்தாலும் நம் படங்களுக்கு ஒன்றிய அரசு விருது கிடைக்காது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இதுதான் நிலைமை. இப்படத்தில் இயக்குநர் ஒரு அற்புதமான கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதாவது காதலித்து தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்ற கருத்தைச் சொல்லிருக்கிறார்” என்றார்.