பாக்ஸ் ஆஃபீஸில் சாதனை படைக்கும் ‘கல்கி 2898 கி.பி’: நான்கே நாட்களில் ரூ.555 கோடி வசூல்!

தெலுங்கில் எடுக்கப்பட்டு, தமிழ், இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்டு, கடந்த ஜூன் 27ஆம் தேதி வெளியாகி, தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் ’கல்கி 2898 கி.பி’. அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. குறிப்பாக அமெரிக்காவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் அமெரிக்காவிலும் படம் வசூலைக் குவித்து வருகின்றது.

இந்நிலையில் ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் தற்போது ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருப்பது, ’கல்கி 2898 கி.பி’ படம் எப்போது ரூபாய் 1000 கோடிகளை வசூல் செய்யும் என்பது தொடர்பாகத் தான்.

இப்படியான நிலையில், முதல் நான்கு நாட்களில் படத்தின் வசூல் எவ்வளவு கோடி என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் முதல் நான்கு நாட்களில் படம் ரூ.555 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படம் இந்த வார இறுதிக்குள் 1000 கோடிகளை நெருங்கிவிடும் என்றும், அடுத்த வாரத்தில் ஆயிரம் கோடி வசூலைக் கடந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

படத்தின் ஓடிடி உரிமம் ஏற்கனவே ரூ.175 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டதால், தயாரிப்பு நிறுவனம் தற்போது லாபத்தை அறுவடை செய்துவருகிறது.