கடைசி உலகப்போர் – விமர்சனம்

நடிப்பு: ஹிப்ஹாப் ஆதி, நாசர், நட்டி ( நட்ராஜ்), அனகா, அழகம் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், இளங்கோ குமணன், சிவா ஷாரா ரா, எஃப்ஜே, வினோத் ஜிடி, குகன் பிரசாத், அலெக்ஸ், ராக்கெட் ராஜேஷ், சூ கோய் ஷெங்

இயக்கம்: ஹிப்ஹாப் ஆதி

ஒளிப்பதிவு: அர்ஜுன்ராஜா

படத்தொகுப்பு: பிரதீப் இ ராகவ்

இசை: ஹிப்ஹாப் ஆதி

தயாரிப்பு: ஹிப் ஹாப் தமிழா என்டர்டைன்மெண்ட்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் எஸ்2 மீடியா

’எதுவும் இல்லாதபோது மனிதர்கள் ஒற்றுமையாக இருப்பது போல், அனைத்தும் இருக்கும்போதும் ஒற்றுமையாக இருந்தால் எப்படி இருக்கும்’ என்ற மகத்தான கற்பனையைக் கருவாக வைத்து, மூன்றாம் உலகப் போர் பின்னணியில், உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை பேசியிருக்கும் ஹிப் ஹாப் ஆதியின் வித்தியாசமான முயற்சி தான் ‘கடைசி உலகப் போர்’.

கதை என்னவென்றால், ஐ.நா.சபையில் இருந்து விலகி, சீனாவும் ரஷ்யாவும் 2028-ல் ‘ரிபப்ளிக்’ என்ற கூட்டமைப்பை உருவாக்குகிறது. இதில் இணையாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் ஜி.என்.ஆர் (நாசர்), ஊழல்வாதியான அவரது மைத்துனர் நடராஜ் (நட்டி நடராஜ்) ஆட்டி வைப்பதற்கேற்ப ஆட்சி நடத்துகிறார். ஜி.என்.ஆரின் திடீர் உடல்நலக் குறைவால், அவரது இடத்தில் மகள் கீர்த்தனாவை (அனகா) தனக்கேற்ற பொம்மையாகப் பொருத்தி வைக்க, அவரைக் கல்வி அமைச்சர் ஆக்குகிறார் நடராஜ்.ஆனால், தமிழரசனின் (ஹிப் ஹாப் ஆதி) வழிகாட்டுதலால், சுயமாகச் செயல்படத் தொடங்குகிறார் கீர்த்தனா. அவரை பின்னாலிருந்து இயக்கும் தமிழரசனைத் தீவிரவாதி எனப் புனைந்து என்கவுன்ட்டர் செய்ய ஏற்பாடு செய்கிறார் நடராஜ். அந்த நேரத்தில் மூன்றாம் உலகப் போர் உருவாகிறது. ரிபப்ளிக் படைகளின் தாக்குதலுக்கு சென்னை இலக்காக, இதில் தமிழ்நாடு, இந்தியாவின் நிலை என்னவானது? நடராஜ், தமிழரசன் என்னவானார்கள்? உலகப் போர் முடிவுக்கு வந்ததா இல்லையா என்பது கதை.

ஐ.நா சபையின் ஆயுதப் பயிற்சி பெற்றவராக நடித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி, அதற்கேற்ற முறுக்குடன் இருந்தாலும், அமைதியான முறையில் அரசியல் பேசுகிறார். காதலி கல்வி அமைச்சராகப் போகிறார் என்றதும் அவர் மூலம் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர நினைக்கும் அவரது முயற்சி பாராட்டத் தக்கதாக இருக்கிறது. காதல் காட்சிகள் குறைவாக இருந்தாலும், சண்டைக்காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பார்வையாளர்களை கவர்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அனகாவின் முகத்தில் தெரியும் முதிர்ச்சி, நடிப்பிலும் தெரிகிறது. கொடுத்த வேலை குறைவு என்றாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.

முதலமைச்சரின் உறவினராக நடித்திருக்கும் நட்டி என்ற நட்ராஜ், தன்னை ஒரு கிங் மேக்கர் என்று சொல்லிக்கொண்டு ஆட்சியாளர்களை ஆட்டுவிக்கும் வேலையை அமர்க்களமாக செய்திருக்கிறார். நட்டியின் வழக்கமான பாணி தான் என்றாலும், அது அவரது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்ப்பதோடு, அவரது கதாபாத்திரம் படத்திற்கும் பலமாக பயணிக்கிறது.

முதலமைச்சராக நடித்திருக்கும் நாசரின் அனுபவ நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.  புலிப்பாண்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அழகம்பெருமாள், சினிமா நடிகராக நடித்திருக்கும் ஷாரா ஆகியோர் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள். 

முனீஷ்காந்த், சிங்கம்புலி, ஹரீஷ் உத்தமன், கல்யாண், தலைவாசல் விஜய், குமரவேல், இளங்கோ குமணன் ஆகியோர் கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

எழுதி இயக்கி இசையமைத்து தயாரித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி, வித்தியாசமான முயற்சியை இப்படத்தின் மூலம் எடுத்திருக்கிறார். 

 உலகின் பல பகுதிகளில் நடக்கும் போர்கள் தொடர்பாக நாம் செய்தி தாள்களில் படித்தும், தொலைக்காட்சிகளில் பார்த்தும் கடந்திருப்போம். ஆனால், அப்போர்களை எதிர்கொள்ளும் அம்மக்களின் நிலை எப்படி இருக்கும்? என்பது குறித்து ஹிப் ஹாப் ஆதி யோசித்ததோடு நின்று விடாமல், இத்தகைய போர் இனி எங்கும் வரக் கூடாது என்ற சிந்தனையில் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஆதியின் இந்த நல்ல உள்ளத்தை நிச்சயம் பாராட்டினாலும், அவர் சொல்ல வருவதை மக்கள் சரியாக புரிந்துக் கொள்ளாதபடி திரைக்கதையில் பல விசயங்களை திணித்திருப்பது படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது.

அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உடன் இணைந்து திரையில் பிரமாண்டமான மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறது. 

படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவ் மற்றும் சண்டைப் பயிற்சியாளர் மகேஷ் மேத்யூ இருவரது பணியும் படத்தின் தரத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

பாட்டு, நடனம், நகைச்சுவை என்ற தனது வழக்கமான பாணியை தவிர்த்து, சமூக பொறுப்புணர்வோடு இப்படத்தை தனது சொந்த முதல் தயாரிப்பாக தயாரித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதியின் இந்த வித்தியாசமான முயற்சியில் சில குறைகள் இருந்தாலும்,  முழுமையான திரைப்படமாக பார்க்கும்போது அந்த குறைகள் தெரியாமல் ரசிகர்களை திருப்திப்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது. ‘கடைசி உலகப் போர்’  – வரவேற்கத் தக்க வித்தியாசமன முயற்சி.