“நேர்மையான ஒவ்வொரு இந்தியரும் ‘ஜவான்’ தான்!” – ஷாருக்கான்

உலகம் முழுவதும் ‘ஜவான்’ திரைப்படத்திற்கான பிரமாண்ட வரவேற்பு  மற்றும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு மத்தியில், படக்குழு வெற்றியை கொண்டாடும் விதமாக  செய்தியாளர் சந்திப்பு நிகழ்வை மும்பையில் ஏற்பாடு செய்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் அபாரமான வசூல் எண்ணிக்கையுடன், இன்னும் வெற்றிநடை போட்டு இன்னும் பல  புதிய சாதனைகளை படைத்து வருகிறது. வெற்றிக்கு நன்றி சொல்லும் வகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் முக்கிய நட்சத்திரக் குழுவினர் கலந்துகொண்டு,  ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு வெகு விமரிசையாக நடந்து முடிந்தது.

நிகழ்வில் பேசிய ஷாருக்கான், “கரோனா காரணமாக ‘ஜவான்’ படத்தை உருவாக்க 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஏராளமான பணியாளர்கள், குறிப்பாக தென்னிந்தியாவைச் சேர்ந்த பலரும் மும்பையில் தங்கி 4 ஆண்டுகளாக இரவு, பகல் பாராமல் படத்துக்காக உழைத்தார்கள். பலரும் தங்கள் வீடுகளுக்குச் செல்லவேயில்லை. சிலருக்கு குழந்தைகள் இருந்தும் அவர்கள் மும்பையிலேயே தங்கியிருந்தனர். இயக்குநர் அட்லீயும் அதில் ஒருவர்.அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மொழி புரியாவிட்டாலும் தென்னிந்தியாவிலிருந்து வெளியாகும் படங்களுக்கு நான் ரசிகன். நல்வாய்ப்பாக தற்போது டப்பிங்கிலும், சப்டைட்டிலிலும் உங்களால் படங்களை பார்க்க முடிகிறது. ‘ஜவான்’ அனைத்து இந்தியர்களையும் பிரதிநிதித்துவப்படுகிறது. நேர்மையான ஒவ்வொரு இந்தியரும் ‘ஜவான்’தான்” என்றார்.

மேலும், அவரது 3 வருட இடைவெளிக்குப் பின் வெளியாகும் படங்கள் குறித்து பேசுகையில், “நான் எல்லாவற்றையும் பாசிட்டிவாக எடுத்துக்கொள்வேன். ஆனால் 3 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்குள் வரும்போது பதற்றம் இருந்தது. கடவுள் ‘பதான்’ படத்தில் கருணை காட்டினார். ‘ஜவான்’ படத்தில் இன்னும் அதிக கருணை காட்டினார். அடுத்து ‘டன்கி’ கிறிஸ்துமஸுக்கு வெளியாகும்” எனத் தெரிவித்தார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜவான் படத்தின்  பாடல் நிகழ்ச்சியை படக்குழு  நிகழ்த்தியது. இந்நிகழ்ச்சி மும்பையில் 2 மணி நேரம் மாலையில் நடைபெற்றது. படத்தின் ஒலிப்பதிவு மற்றும் பின்னணி இசையமைத்த அனிருத் ரவிச்சந்தர், சந்திப்பின்போது நேரலையில் இசையமைத்தார், கிங் கானின் ராப் டிராக்கை எழுதி பாடிய  ராஜ குமாரியும் இதில் பங்குகொண்டார். ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனேவுடன், விஜய் சேதுபதி, சுனில் குரோவர், சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பெண் கலைஞர்களும் மற்றும் ஜவானின் முழு நட்சத்திரக் குழுவினரும் கலந்து கொண்டனர். இதில் இயக்குநர் அட்லியும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.  நாயகி நயன்தாரா  சில காரணங்களால் பங்கேற்க முடியாததால், ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு அன்பான வாழ்த்துக்களை அனுப்பினார். இவர்களைத் தவிர, ஜவானுக்குப் பின்னால் முதுகெலும்பாக இருந்த ஜவானின் தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த  செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் சாலேயா பாடலுக்கு SRK மற்றும் தீபிகா படுகோனே நடனமாடி அசத்தினர். இதற்கு முன்னதாக, SRK நாட் ராமையா வஸ்தாவய்யா பாடலையும் நேரலையில் நிகழ்த்தினார், அவரது வசீகரமான நடனத்தால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.