“இருமுகன்’ பட வேலைகள் நடக்குமா என்ற கவலை இருந்தது”: விக்ரம் பேச்சு!

“தயாரிப்பாளர் சிபு தமீனுக்கு நன்றி. அவர் இல்லையென்றால் ‘இருமுகன்’ படமே இல்லை. பத்து மாதமாக இந்தப் பட வேலைகள் நடக்குமா நடக்காதா.. நடக்கவே நடக்காது என்கிற கவலை இருந்தது. ஆனால் இரண்டே நாளில் முடிவு செய்து எல்லாவற்றையும் மாற்றினார் சிபு தமீன்” என்று நடிகர் விக்ரம் கூறினார்.

விக்ரம் முதன்முதலாக இரு வேடங்களில் நடித்துள்ள படம் ‘இருமுகன்’. தமீன் பிலிம்ஸ் தயாரிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கத்தில், ஆரோ சினிமாஸ் வெளியீட்டில் திரைக்கு வந்திருக்கும் இப்படம், அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்தின் வெற்றியை முன்னிட்டு படக்குழுவினர் இன்று செய்தியாளர்களை சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விக்ரம் பேசும்போது, “இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி. ஆதரவு தந்த ஊடகங்களுக்கு நன்றி. ஒரு நடிகனுக்கு அவன் நடித்த கடைசிப்படம் முக்கியம். அதன் கதாபாத்திரம்தான் அவனுக்கு முகவரியாக இருக்கும். ‘இருமுகன்’ படத்தில் வேறுபட்ட இரண்டு கதாபாத்திரங்களை எனக்காக உருவாக்கி நடிக்க வைத்த இயக்குநர் ஆனந்த் சங்கருக்கு நன்றி.

அவரது சிறப்பான தனிகுணம் எல்லாரையும் அவர்களின் போக்கில் செயல்பட விட்டு அவர்களிடமுள்ள சிறப்பான விஷயத்தை வெளிப்படுத்த வைப்பதுதான். அப்படி அவர் எல்லாருக்கும் முழு சுதந்திரம் கொடுத்தார். நித்யாமேனன் கூட இந்த வசனத்தை இப்படி பேசலாமா என்று எனக்கு போனில் கேட்பார். அந்த அளவுக்கு எல்லாரையும் தங்கள் சொந்தப் படம் போல நினைக்க வைத்தார்.

நான் இதில் நடித்த இரண்டு பாத்திரங்களும் ஒன்றின் சாயல் இன்னொன்றின் மீது படாதபடி, ஒன்றின்  நிழல் இன்னொன்றின் மீது விழாதபடி எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருந்தது. அவர் கொடுத்த சுதந்திரத்தில் தினசரி படப்பிடிப்புக்கு முழு பலத்துடன் போவேன்.  நடித்த இரண்டு பாத்திரங்களில் எது முக்கியம்? எதை நடிக்கும்போது சிரமப்பட்டீர்கள்? என்று கேட்டார்கள். எனக்கு இரண்டுமே ஒன்றுதான். இரண்டுமே முக்கியம்தான்.

ஆனந்த் சங்கர் நல்ல கதை சொல்லி. நன்றாகக் கதை சொன்னார். அவர் கதை சொல்லும்போதே எங்கே ரசிகர்கள் சிரிப்பார்கள், எங்கே ரசிகர்கள்  கை தட்டுவார்கள் என்பதை எல்லாம் திட்டமிட்டு செய்வார்.

இந்தப் படக்குழுவில் இருக்கும்போது மணிரத்னம், ஷங்கர் போன்றோரின் பெரிய படக்குழுவில்  இருப்பது போல உணர்ந்தேன். பெரிய பெரிய ஆட்களாகவே எல்லாருமே இருந்தார்கள். அப்படிப்பட்ட படக்குழுவுக்கு நன்றி.

சுரேஷ் செல்வராஜ் போட்ட செட் பிரமாண்டமாக இருந்தது. மிரண்டு விட்டேன். எளிமையான பொருட்களைக்கொண்டே செய்து அசத்தியிருந்தார்.

பொதுவாக, படத்தில் நடிப்பவர்கள் எவ்வளவோ சிரமப்பட்டு நடித்திருப்பார்கள். ஆனால்  எடிட்டிங்கில் குதறி விடுவார்கள். இதில் நான் நடித்த எல்லாக் காட்சிகளும் இருந்தன. விறுவிறுப்பாகவும் எடிட்டிங் செய்திருந்தார் புவன் சீனிவாஸ்.

ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ‘பீமா’ வுக்குப் பிறகு நண்பராகி விட்டார். பிரச்சினையான காலகட்டத்தில் உதவியாக ஊக்கமாக இருப்பார். எனக்காக என் சௌகரியத்துக்காக லைட்டிங் எல்லாமே மாற்றினார்.

தயாரிப்பாளர் சிபு தமீனுக்கு நன்றி. அவர் இல்லையென்றால் இந்தப் படமே இல்லை. பத்து மாதமாக இந்தப் பட வேலைகள் நடக்குமா நடக்காதா.. நடக்கவே நடக்காது என்கிற கவலை இருந்தது. ஆனால் இரண்டே நாளில் முடிவு செய்து எல்லாவற்றையும் மாற்றினார். இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை. எல்லாமே கனவு போல இருக்கிறது.

இந்தப் படத்துக்காக ஹரிஸ் ஜெயராஜ் பறந்து பறந்து வேலை பார்த்தார். ஒரு டீஸருக்கு, ட்ரெய்லருக்கு இவ்வளவு உழைப்பா? என வியந்தேன். ‘சாமுராய்’ முதல் நாங்கள் இணைந்து பயணிக்கிறோம். அந்தப் படத்துக்குப் போட்ட ‘மூங்கில் காடுகளே’ பாட்டுதான் இன்றும் என் காலர் ட்யூன். பிறகு ‘அருள்’ ,’பீமா’ ,’அந்நியன்’ என்று இணைந்தோம். இப்போது ‘இருமுகன்’ மறக்க முடியாதது. அவருக்கும் நன்றி.” என்றார்.

இயக்குநர் ஆனந்த் சங்கர் பேசும்போது “நல்லதொரு வணிக ரீதியிலான படம் எடுக்க வேண்டும். அப்படித்தான் திட்டமிட்டு எடுத்தோம் அதுவே என் நோக்கம். விக்ரமை மனதில் வைத்துதான் இந்தக் கதையை எழுதினேன். அவர்தான் இதற்கு இன்ஸ்பிரேஷன்.

சிபு தமீன் டிசம்பரில் வந்தார். ஜனவரியில் படம் தொடங்கினோம். அவர்தான் படத்தைக் கொஞ்சம்  கொஞ்சமாக பெரிதாக்கினார். செப்டம்பரில் வெளியிட்டு விட்டோம். கால அளவு குறைவு. பறக்க பறக்க ஓடினோம். எல்லாருக்கும் பெயர் சொல்ல வாய்ப்பு இருந்தது. கதை இல்லாத காட்சிகளில்கூட இசைக்கு கைதட்டல் கிடைத்தது. இப்படி ரசிகர்களுக்குப் பிடித்த படமாகி வெற்றி பெற்றிருப்பதில் மகிழ்ச்சி” என்றார்.