இன்ஃபினிட்டி – விமர்சனம்

நடிப்பு: நட்டி நட்ராஜ், வித்யா பிரதீப், முனீஸ்காந்த், முருகானந்தம், ஜீவா ரவி, மோனா பேடர், நிகிதா, ஆதவன், சிந்துஜா மற்றும் பலர்
இயக்கம்: சாய் கார்த்திக்
ஒளிப்பதிவு: சரவணன் ஸ்ரீ
படத்தொகுப்பு: எஸ்.என்.ஃபாசில்
இசை: பாலசுப்பிரமணியன்.ஜி
தயாரிப்பு: மென்பனி புரொடக்சன்ஸ்
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
சென்னையில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அதை காவல்துறை துப்பு துலக்குவதற்கு முன் ஒரு எழுத்தாளர், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு குடிநோயாளி அடுத்தடுத்து கொலை செய்யப்படுகின்றனர். இந்த கொலைகள் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை. இதனை விசாரிக்கும் பொறுப்பு சி.பி.ஐ. அதிகாரியான இளவளவனிடம் (நட்ராஜ்) ஒப்படைக்கப்படுகிறது.
அவரும் கொலையாளியை பிடிக்க முடியாமல் தடுமாறுகிறார்.
இன்னொரு புறம், அரசு மருத்துவரான நந்தினி (வித்யா பிரதீப்) சிகிச்சை அளிக்கும் குழந்தைகள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இதனால் அவரையும் கண்காணிக்க ஆரம்பிக்கிறார் இளவளவன்.
இந்த கொலைகளுக்கு எல்லாம் காரணம் என்ன? இதை எல்லாம் செய்வது யார்? குற்றவாளியை இளவளவன் கண்டுபிடித்தாரா? மருத்துவர் நந்தினியை சுற்றி நடக்கும் மர்மம் என்ன? என்பது ‘இன்ஃபினிட்டி’ படத்தின் மீதிக்கதை.
சி.பி.ஐ. அதிகாரி இளவளவன் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார் நட்ராஜ். குற்றவாளிகளை விசாரிக்கும் தோரணை, வழக்கை முடிப்பதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் என அனைத்தும் கதாபாத்திரத்துக்கு பெருமை சேர்க்கிறது.
மருத்துவர் நந்தினியாக வரும் வித்யா பிரதீப் அழகாலும், அளவான நடிப்பாலும் மனதைத் தொடுகிறார். அவருடைய இன்னொரு முகம் பகீர் ரகம். கிளைமாக்ஸ் காட்சியில் அவர் காட்டும் அதிரடி ஆக்சன் சிறப்பு.
காவலராக வரும் முனீஸ்காந்த் சிரிக்க வைக்கிறார். நாயகனின் நண்பராக வரும் முருகானந்தம், இளம்பெண்ணின் அப்பாவாக வரும் ஜீவா ரவி, அம்மாவாக வரும் மோனா பேடர், மற்றும் நிகிதா, ஆதவன், சிந்துஜா என அத்தனை கதாபாத்திரங்களும் இயல்பான நடிப்பு மூலம் கவனிக்க வைக்கிறார்கள்.
பாலசுப்பிரமணியன் இசையில் இரண்டு பாடல்களும் கதையை நகர்த்த உதவுகிறது. பின்னணி இசையிலும் கவனம் ஈர்க்கிறார்.
சரவணன் ஸ்ரீ ஒளிப்பதிவு படத்தின் தரத்தை கூட்டியுள்ளது.
சி.பி.ஐ. விசாரணைகள், கூடவே பயணிக்கும் குற்றவாளிகளின் கதை என கிரைம் திரில்லர் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சாய் கார்த்திக். குற்றங்கள் குறைவது தனி மனிதனின் ஒழுக்கத்தில்தான் இருக்கிறது என்ற நல்ல மெசேஜும் படத்தில் இருக்கிறது
’இன்ஃபினிட்டி’ – கிரைம் திரில்லர் பிரியர்களுக்குப் பிடிக்கும்!