இந்தியாவில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைப்பது இந்தி மொழியாம்: பாஜக, காங்கிரஸ் பிதற்றல்!

இந்தி பேசும் மக்களால் செப்டம்பர் 14ஆம் தேதியான இன்று ’இந்தி தினம்’ கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவருமான அமித் ஷா ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவி்த்துள்ளார். அதில், “இந்தியா பல்வேறுவிதமான மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அததற்குரிய சொந்த முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால், இந்த உலகில் இந்தியாவின் அடையாளமாக ஒரு மொழிதான் இருக்க வேண்டும் என்பது முக்கியம். இன்றுள்ள நிலையில், நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்.

இன்று, இந்தி தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டில் உள்ள அனைத்து மக்களிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், இந்தி மொழியை பயன்படுத்துவதை அதிகமாக்க வேண்டும். இந்தியால் மட்டும்தான் மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேலின் கனவை நிறைவேற்ற முடியும். அனைவருக்கும் இந்தி தின வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “நாடு முழுவதும் அதிகமான பேசப்படும், புரிந்து கொள்ளப்படும் மொழியான இந்தி மொழிதான் அனைவரையும் ஒருங்கிணைக்கிறது, உலகில் நம்முடைய அடையாளமாக இந்தி இருக்கிறது. அனைவருக்கும் இந்தி தின வாழ்த்துக்கள். நமது அன்றாட வாழ்க்கையில் இந்தி மொழியின் பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில் “இந்தியை விரும்புவோம். அனைவரையும் ஒருங்கிணைக்கும் மொழி இந்திதான். அனைத்து எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், இந்தி மொழிக்கு சேவையாற்றியவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்தி தின வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்தார்.