தனுஷ் இயக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ பிப்ரவரி 7ஆம் தேதி திரைக்கு வருகிறது!

நடிகர் தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பவர் பாண்டி’, ‘ராயன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தனுஷ் மூன்றாவதாக இயக்கியுள்ள புதிய படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மலையாள நடிகர் மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
அண்மையில் வெளியான முதல் சிங்கிள் ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்தப் படம் வரும் பிப்ரவரி 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இயக்குநராக தனுஷ் தனது 4-வது படத்தை தற்போது இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ‘இட்லி கடை’ என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.