ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்: நேரில் ஆறுதல்

சென்னையில் ஜுலை 5ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9ஆம் தேதி, செவ்வாய் கிழமை) நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவையொட்டி, அவரது இல்லத்துக்குச் சென்று, அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி பொற்கொடிக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.

கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது.

இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும், காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.