ஆகமம் படித்தவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க சாதி தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் காலியாக உள்ள அர்ச்சகர் மற்றும் ஸ்தானிகர் பணியிடங்களை நிரப்ப கோயில் செயல் அலுவலர் கடந்த 2018-ல் அறிவிப்பாணை வெளியிட்டார். ஆனால் இந்த அறிவிப்பு ஆகம விதிகளை பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, அந்த கோயிலில் பரம்பரை அர்ச்சகராக பணியாற்றிவரும் முத்து சுப்ரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்து வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலன், ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் ஆகம விதிகளின்படியே அர்ச்சகர் நியமனமும் கண்டிப்பாக நடைபெற வேண்டும் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆகம விதிகளைக் கடைப்பிடிக்கும் கோயில்களை இனம் கண்டு, அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்தக்குழு இதுவரையிலும் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்பதால், அதுவரை அர்ச்சகர் நியமனங்களை தள்ளிப்போட வேண்டும். சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் ஆகம விதிகளின்படி பாரம்பரியம், கோயில் மரபு மற்றும் வழக்கத்துக்கு உட்பட்டே அபிஷேகம் மற்றும் ஆராதனைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல, கோயில் செயல் அலுவலர், தக்காராக செயல்பட்டு அர்ச்சகர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிட முடியாது என வாதிட்டார்.

பதிலுக்கு அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், “ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களைக் கண்டறிய அமைக்கப்பட்டுள்ள குழுவின் செயல்பாடுகளுக்கு, உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதால் அந்தக்குழு இன்னும் முழுவீச்சில் இயங்கவில்லை. எனவே, ஆகம விதிகளை கடைப்பிடிக்கும் கோயில்களில் தலைமை அர்ச்சகர்கள் அளிக்கும் தகுதிச்சான்றின் அடிப்படையில் ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களை அரச்சகர்களாக நியமிக்க அனுமதியளிக்க வேண்டும்.

கோயில்களில் அர்ச்சகர், ஸ்தானிகர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிட தக்கார் என்ற முறையில் கோயில் அலுவலருக்கு முழுஅதிகாரமும் உள்ளது” என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், “ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்கள் எவை என்பதைக் கண்டறிய அமைக்கப்பட்டுள்ள குழு இன்னும் தனது பணிகளை தொடங்கவில்லை. அந்தக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும் வரை அர்ச்சகர்களை நியமிக்கக்கூடாது என உயர் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்படவில்லை. பல கோயில்களில் அர்ச்சகர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அந்தக் குழுவின் அறிக்கைக்காக காத்திருந்தால், அன்றாடம் நடைபெற வேண்டிய பூஜை, அபிஷேகம் போன்றவற்றை தடையின்றி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும். சேலம் சுகவனேஸ்வரர் கோயிலைப் பொருத்தமட்டில் ‘காரணம் – ஆகமம்’ பின்பற்றப்படுவதாக சொத்துப் பதிவேட்டில் உள்ளதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

எனவே, ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களை, குறிப்பிட்ட ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கலாம். அதற்கு எந்தவொரு ஜாதியும் தடையாக இருக்காது. அதாவது ஆகம விதிகளை பூர்த்தி செய்யக்கூடிய தகுதியான நபர்களை அர்ச்சகர்களாக நியமிக்கும்போது, பரம்பரை, பரம்பரையாக குறிப்பிட்ட ஜாதியினரை மட்டும்தான் அர்ச்சகர்களாக நியமிக்க முடியும் என உரிமை கோர முடியாது.

இந்த வழக்கைப் பொருத்தமட்டில் சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் புதிதாக அர்ச்சகர்களை தேர்வு செய்யும் வரை மனுதாரர் பணியில் தொடர அனுமதிக்க வேண்டும். பின்னர் நடத்தப்படும் தேர்வில் மனுதாரரையும் பங்கேற்க அனுமதித்து முடிவு எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.