திரைப்படமாகும் போராளி பிர்சா முண்டாவின் உண்மை கதை!

இதே நவம்பர் 15ஆம் தேதியில்தான், இதே நள்ளிரவு வேளையில் தான், உலிகாட் வனப்பகுதியில், பிர்சா என்ற ஆண் குழந்தையை அந்த பழங்குடித் தம்பதிகள் பெற்றெடுத்தார்கள்.

பிர்சா பிறந்த அந்த 1875ஆம் ஆண்டு மழை பொய்த்திருந்தது விளைச்சல் பட்டுப்போய் பஞ்சம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்தது. மக்கள் ஒருவேளை சோற்றுக்காக அல்லல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பிர்சா ஓயாமல் அழுது கொண்டிருந்தான்.

எடை குறைவாகப் பிறந்த, அழுது கொண்டிருக்கும் இந்த நோஞ்சான் குழந்தை தான் இந்த மண்ணில் நாளை வெள்ளையர்களை எதிர்த்து ஒரு வீரஞ்செறிந்த விடுதலைப் போரை முன்நின்று நடத்தப் போகிறான் என்பதை அந்தத் தம்பதியினரோ, முண்டாக்களோ அறிந்திருக்கவில்லை..

அதனால் தான், வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருந்த சுகணாவும், ஹர்மியும் பிர்சாவை வளர்க்க முடியாமல், ஹர்மியின் தம்பியிடம் ஒப்படைத்தார்கள்.

பிர்சா பிறக்கும் முன்பு அந்த மலை சூழ்ந்த மண் எப்படி இருந்தது…?

தொழிற்புரட்சி என்னும் கோரத் தாண்டவத்தால் ஒரு குச்சிக்கம்பைக் கூட விட்டுவைக்காமல், சொந்த நாட்டையே சூறையாடிவிட்ட ஆங்கிலேயர்கள், தங்களது ஆளுகைக்குட்பட்ட காலனி நாடுகளில் தங்களுக்குத் தோதான மரங்களையும், வளங்களையும் தேடியலைந்து கொண்டிருந்தார்கள் .

இரும்புக்கு நிகரான உறுதியுடைய மரங்களும், வாழ்வில் அவர்கள் பார்த்திராத விதவிதமான விலங்குகளும், தங்கமும், நிலக்கரியும் கொட்டிக் கிடக்கும் இந்திய வனங்களும் அவர்களுக்குள் பேராசையை மூட்டிவிட்டிருந்தது.

கொள்ளைக்கான முன்னேற்பாடுகளை கனகச்சிதமாகத் திட்டமிட்டு சத்தமில்லாமல் புளூபிரிண்டாக்கி மேசைக்குள் வைத்துக்கொண்டார்கள்.

ஈவிரக்கமில்லாமல், எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் அவர்களின் அந்த சூறையாடல் திட்டத்தை பனியடர்ந்த வசந்த காலத்தின் ஒரு அதிகாலையில் தான் செயல்படுத்தத் தொடங்கினார்கள்.

அன்றைக்கு இருந்ததில் எது அதிநவீன எந்திரமோ அந்த எந்திரமும், எது அதிநவீன போக்குவரத்து மோட்டாரோ அந்த போக்குவரத்து மோட்டார்களும் பச்சை உடையணிந்த வீரர்களோடு, எங்கெல்லாம் வனம் இருக்கிறதோ அங்கெல்லாம் வந்து சாரைசாரையாக அணிவகுத்து நின்றன.

என்ன நடக்கிறதென்று சுதாகரித்துக்கொள்ளும் முன்பே, பழங்குடிகளின் வனங்களை அவர்கள் இஞ்ச்இஞ்சாகத் துளைக்கத் தொடங்கினார்கள். குறுக்கும் நெடுக்குமாக கீரீச்சிட்டுப் பறந்து தலைகுத்திப்போயின பறவைகள். அந்நியர்களின் உடல் வாசத்தால் அலர்ஜியான யானைகள் சக்தியுள்ளவரை பிளிரி ஓய்ந்த்து.

தேவைக்கு அதிகமாக ஒரு சுள்ளியைக்கூட உடைத்துப் பழக்கமில்லாத, தேவைக்கு அதிகமாக ஒரு பழத்தைக்கூட பறித்து உண்ண விரும்பாத பழங்குடிகள், தங்களுக்கு பாலூட்டிய தாய் போன்ற வனத்தின் மடி தங்களது கண்முன்னே ஈவிரக்கமில்லாது அறுக்கப்படுவதைக் காணச் சகிக்காது கொதித்தெழுந்து கூச்சலிட்டார்கள். என்ன வந்தாலும் சரியென்று கூடி நெருங்கி மூர்க்கமாக எதிர்த்து நின்றார்கள்

நிச்சய்மாய் இந்த எதிர்ப்பை ஆங்கிலேயர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் துப்பாக்கியை நீட்டி வானத்தை நோக்கிச் சுட்டார்கள்  மக்கள் துப்பாக்கிக்கும் பீரங்கிக்கும் அஞ்சவில்லை. மாறாக தங்களது உயிரனைய காட்டுக்காக, உரிமைக்காக தங்கள் நெஞ்சை நிமிர்த்தி நின்றனர்

தங்களால் எந்தெந்த வழிகளிலெல்லாம் எதிர்ப்பைக் காட்ட முடியுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் எதிர்ப்பைக் காட்டினர்

பூட்ஸ்கள் சரசரக்கும் சத்தம் கேட்டால் ஓடி ஒளிந்துகொள்ளும், மேலடை அறியாத, ‘நாகரீகம்’ அறியாத பழங்குடிகளை அவர்கள் அந்த நாள்வரை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை. அப்படிப்பட்டவர்கள் இப்படி எதிர்த்து நிற்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

நாளுக்கு நாள் இந்த போராட்டங்கள் பம்பாய் மாகாணமெங்கும் பற்றிப் பரவியது. கோபத்தீ கொளுந்துவிட்டு எரிந்த்து நிலமை கட்டுக்குள் அடங்காமல் போகவே, பதறிய அதிகாரிகள் மேற்கொண்டு நடக்க வேண்டியவை குறித்து ஆலோசனை செய்தனர் அது சதியாகத் தான் இருந்திருக்குமே தவிர வேறு எதுவுமாக இருந்திருக்க வாய்ப்பிலை

ஒரு இரவில் அந்த சதி அறிவிப்பு வந்தது  வனப்பகுதியிலிருக்கும் எல்லா மரங்களும், எல்லா விலங்குகளும், எல்லா பறவைகளும், எல்லா வளங்களும், எல்லா நிலங்களும் ஆங்கில அரசுக்கு சொந்தமானவை. இதில் தலையிடவோ, இங்கே நடக்கும் பணிகளைத் தடுக்கவோ  யாருக்கும் எந்த உரிமையுமில்லை. ஒரு குயில் கூட தங்களைக் கேட்காமல் கூவக் கூடாது என்று அறிவித்தது. திட்டமிட்டுத் தொடுக்கப்பட்ட வழக்கொன்றில் இந்த அறிவிப்பை ஒரு தீர்ப்பாக மாற்றி சட்டமாகவும் இயற்றினார்கள். வனத்திற்கென்று ஒரு துறையைத் தொடங்கி எல்லா அதிகாரங்களையும் அந்த துறையிடம் குவித்துக்கொண்டார்கள். அதற்குத் தோதாக வனச்சட்டத்தை வகுத்துக்கொண்டார்கள்

அந்த வனச்சட்டத்தின்படி, ஆதிவாசிகள் தாங்கள் தங்கியிருக்கும் வீடுகளுக்கு, தாங்கள் உழுதுகொண்டிருக்கும் துண்டுதுக்கடா நிலங்களுக்கு, தாங்கள் ஆடுமாடு மேய்க்கும் மேய்ச்சல் நிலங்களுக்கு.. வனத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். அவர்கள் அனுமதி கொடுக்க வேண்டுமென்றால் ஒரு வரி செலுத்த வேண்டும் அப்படி வரி செலுத்தாவிட்டால் அந்த நிலங்களைவிட்டு வெளியேற வேண்டும் என்று எச்சரித்தது அதன்படி செயல்படவும் தொடங்கியது

வனத்துறையை மேலும் விரிவாக்கி பல்லாயிரம் பணியாளர்களை நியமித்து அதை ஒரு முறையான அமைப்பாக்கி பம்பரமாக செயல்பட ஆரம்பித்தார்கள்

நிற்க…

இந்த சூழலில்தான் வனத்தின் தென்கிழக்காக இருந்த தனது மாமாவின் கூரையில், கும்லா மலையின் அருவியும், அதன் காற்றும், பழங்களும், விலங்குகளின் இறைச்சியும் பிர்சாவுக்கு தேவையான ரத்தத்தையும் சதையையும் தந்துதவுகின்றன

அவன் மெல்ல தவழத் தொடங்குகிறான்

ஆனால் 1880ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஆங்கில அரசு பல்வேறு தந்திரங்கள் மூலமாக கிட்டத்தட்ட எல்லா வனங்களையும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்துவிட்டது

அதேநாள் சோட்டா நாகபுரியில் நிலச்சுவான்தார்களையும் வட்டிக்காரர்களையும் அழைத்து ஆங்கில அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்

“வரியாக பணம் கட்ட நீங்க தயாரா?”

“எவ்ளோ காசு வேணுமின்னாலும் கட்டறோம். நிலத்த நாங்க எடுத்துக்கறோம்.”

போட்டிபோட்டுக்கொண்டு அந்த நிலங்களை வட்டிக்காரர்களும், வசதி படைத்தவர்களும் வளைக்கத் தொடங்கினர்.
பழங்குடிகளின் கண் முன்னாலேயே நிலத்தில் இறங்கி, எல்லை பிரித்து, வேலி போடத் தொடங்கினர். கரைகளில் உட்கார்ந்து கண்ணீரோடு பழங்குடிகள் குமுறிக் குமுறி அழுது கொண்டிருந்தார்கள் .

கிட்டத்தட்ட 50 சதவீத நிலம் இப்போது அவர்களின் கையைவிட்டு போயிருந்தது. மீதி இருந்த நிலங்களும் கொஞ்சம் கொஞ்சமாக கைமாறிக்கொண்டிருந்தது

நிலமிழந்த ஆதிவாசிகள் உணவுக்காக, உயிர் வாழ, வட்டிக்காரர்களிடம் தங்களைத் தாங்களே விற்றுக்கொண்டு அடிமைகளாக மாறிக்கொண்டிருந்தனர். துப்பாக்கி முனையில் அவர்கள் கசக்கிப் பிழியப்பட்டனர்

1894ஆம் ஆண்டு ஒரு சொட்டு மழையில்லை. வீட்டில் ஒரு கைப்பிடி தானியமில்லை. பட்டினிச்சாவுகள் ஆங்காங்கே நிகழத் தொடங்கியிருந்தது.

இந்த துயரமான நிலையிலும் வரி கட்டாமலிருக்கும் ஆதிவாசிகளின் நிலங்களை கையகப்படுத்த பிரிட்டிஷ் அதிகாரிகள் மூர்க்கமாக முயன்று கொண்டிருந்தனர்.

முண்டாக்கள் கொதித்தெழுந்தார்கள். அக்டோபர் 1ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள் தங்களது நிலம் பறிபோகக் காரணமாக இருந்த வரிகளைத் தள்ளுபடி செய்யக் கோரி வரலாறு காணா ஆர்பாட்டத்தையும், பிரமாண்டமான பேரணியொன்றையும் நடத்தி பிரிட்டிஷாரை ஆட்டம்காண வைத்தனர்

பேரணி சோட்டா நாக்பூர் பிரிட்டிஷ் தலைமை அலுவலகத்தின் முன்னால் வந்து நின்றது. கூடியிருந்த ஆயிரக்கணக்கான முண்டாக்கள் யாரையோ எதிர்பார்த்து ஒருவொருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்

கூட்டத்தின் கடைசியிலிருந்து ஆட்களை ஒதுக்கிகொண்டே நடுவே புகுந்து, ஒடிசலான தேகம் கொண்ட ஒரு இளைஞன் ஆவேசமாக முன்னேறி வந்துகொண்டிருந்தான்.

20 வயதுகூட நிரம்பாத அந்த இளைஞன் தான் துணிவோடு இந்தப் போரை முன்னின்று வழிநடத்தியவன் என்று பேசிக் கொண்டார்கள். கூட்டம் வழிவிட்டு ஒதுங்கி், அவனது வாயசைவுக்காக காத்து நின்றது

முன்னால் வந்து அங்கே கிடந்த உயரமான பாறையின் மேலே ஏறி நின்று, அந்த இளைஞன் முழங்கத் தொடங்கினான்…
“ஜல் ஹமாரே (நீர் நமது)
ஜமீன் ஹமாரே (நிலம் நமது)
ஜங்கில் ஹமாரே (வனம் நமது)”

அந்த இளைஞன் முழங்க முழங்க, கூட்டமும் அந்த முழக்கத்தை திரும்பத் திரும்ப முழங்கி ஆர்ப்பரித்தது.

அந்த இளைஞன்..வேறு யாருமல்ல, உலிகாட்டில் பிறந்து கும்லாவில் வளர்ந்த நோஞ்சான் குழந்தை தான் அவன்.

நன்றாக வளர்ந்துவிட்டிருந்தான். அவனது குரலும் உடலும் ஏதோ தீர்க்கத்தை தின்று வளர்ந்ததுபோல் மாறிவிட்டிருந்தது.

வசீகரமான சத்திய ஆவேசமாக அவன் எழுப்பிய இந்த முழக்கம், முண்டாக்களுக்குள் புகைந்துகொண்டிருந்த நெருப்பை ஊதிப் பெருக்கி ஊழித்தீயாக்கியது.

அந்த முழக்கம் மலைகளின் இண்டு இடுக்கிலெல்லாம் இடிமுழக்கமாக ஒலிக்கத் தொடங்கியது. அது எல்லைகளைக் கடந்து, தடையுடைத்து எங்கும் பரவியது. அது ஒவ்வொரு முண்டாவின் இதயத்துக்குள்ளும் இறங்கி, மாயங்களை நிகழ்த்தத் தொடங்கியது. சோட்டா நாகபுரி போர்க்கோலம் பூண்டு நின்றது.

இது அவனுக்கு இன்னும் உற்சாகமூட்டியது  பிரிட்டிஷ் படைகளைச் சமாளிக்க வெறும் முழக்கம் மட்டுமே போதாது என்று உணர்ந்திருந்த பிர்சா, மறைந்து தாக்கவும் மூர்க்கமாகப் போரிடவும் கெரில்லா போர்ப்படையை தன் சொந்தப் பழங்குடிகளை வைத்தே கட்டத் தொடங்கினான்

‘நவீன எந்திரங்களை நவீன எந்திரங்களைக் கொண்டு எதிர்கொள்ள வேண்டியதில்லை. மரபார்ந்த போரை ஒரு மரபற்ற போரால்தான் வீழ்த்த முடியும். அது ஒன்றைத் தான் பழங்குடிகள திறம்பட நடத்த முடியும்’ என்பதில் பிர்சா உறுதியாக இருந்தான்.

தொடர்ச்சியாக வெள்ளையர்களுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களைத் திட்டமிட்டு அவன் நடத்திக்கொண்டே இருந்தான்.

எத்தனையோ தாக்குதல்களை அவன் நட்த்தியிருந்தாலும், ஆங்கிலேயர்களின் ஆணிவேரை அசைத்துப் பார்த்த அதிமுக்கியமான இரண்டு தாக்குதல்களாக பிர்சா நினைத்தது…

1900 ஜனவரி 4.

முண்டாவின் முக்கிய தளபதியான கயா முண்டா செய்ல் மலையில் உள்ள எட்கடியில் இருந்தான். கயாவை கைது செய்துவிட்டால் குறிப்பிட்ட பல கிராமங்களில் பழங்குடிகளின் கிளர்ச்சியை அடக்கிவிடலாம். அதேநேரத்தில் பிர்சாவின் வலதுகையை உடைத்த மாதிரியும் இருக்கும் என்று ஆங்கில மூளை கணக்குப் போட்டது. அந்தக் கணக்கைத் தீர்க்கும் வழிகளோடு போலீஸ் படையொன்று எட்கடி கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது.

போலீஸ் நுழையப்போவதை முன்னமே அறிந்த பழங்குடி ஒற்றன் ஒருவன், பறவையைப் போல ஒரு சங்கேத ஒலியை கிழக்கு திசையை நோக்கி ஒலிக்க விட்டிருந்தான். அது இரண்டு குன்றுகளைத் தாண்டியிருந்த அணிக்குப் போய் சேர்ந்துவிட்டது. எப்படி இதை சமாளிக்க வேண்டும் என்பதற்கான எதிர்சங்கேத ஒலியையும் அவர்கள் அனுப்பிவிட்டார்கள்.

போலீஸ் கிராமத்துக்குள் நுழைந்துவிட்டது. நாய்களும், கோழிகளும் அச்சத்தில் அங்குமிங்கும் ஓடின. நாய்களைத் தேடிக்கொண்டு சிறுத்தை ஒன்று கிராமத்தின் ஓரத்தில் பாய்ந்து விழுந்தது. என்னதென்று யூகிப்பதற்குள் ஒட்டுமொத்த கிராமமும் அவர்கள்மேல் நாலப்புறங்களிலிருந்தும் பாய்ந்து குதறியது

அதில் ஏற்கனவே முண்டாக்கள் பலரையும் கொன்ற போலீஸ் கான்ஸ்டபிள் ஜெய்ராம் கொல்லப்பட்டான். இந்த செய்தி அறிந்த ராஞ்சியின் டெப்ட்டி கமிசனர் ஆயுதம் தாங்கிய போலீஸ் படையொன்றை எட்கடிக்கு அனுப்பி வைத்தான்.

ஆரவாரத்துடன் வந்த அந்தப் படை நீண்ட போராட்டத்துப் பின்பு கயாவை கைது செய்து வீடுகளுக்கு தீ வைத்துவிட்டு வெளியேறியது..
ஆனாலும் ஆயுதம் தாங்கிய போலீஸ்காரர்களிடமிருந்து தங்கள் கயாவை மீட்க, முண்டா ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் இணைந்து நடத்திய சமசரமில்லாத மயிற்கூச்செரியும் சண்டை, அந்த படையினரிடம் ஒரு அச்சத்தை ஏற்படுத்திவிட்ட்து. ஏனென்றால், அவ்வளவு தீர்க்கத்தையும், ராணுவம் போலான ஒரு ஒழுங்கையும், முன்அனுமானம் செய்ய முடியாத ஒரு எதிரியின் வியூகத்தையும் முதன்முதலாக அங்கேதான் அவர்கள் பார்த்தார்கள்
காடுகளுக்குள் சிதறிய முண்டாக்கள் கயா கைதுக்கு பழிவாங்க தயாராகிக்கொண்டிருந்தார்கள்.

1897ஆம் ஆண்டு காலை 10 மணி.

குந்தி காவல் நிலையம் அந்த பகுதிக்கான முக்கியமான கேந்திரமாக இருந்த்து. முண்டாக்களுக்கு எதிரான எல்லா திட்டங்களும் அங்கிருந்துதான் தீட்டப்பட்டது .எல்லா முண்டாப் பகுதிகளையும் கண்காணிக்கும் வசதிகளை இந்த காவல் நிலையம் தான் பெற்றிருந்தது. இந்த அஸ்திவாரத்தைத் தகர்த்தால் ஆங்கிலேயர்களை ஆட்டம்காண வைக்கலாம் என்று திட்டமிட்ட பிர்சா, 400 முண்டாக்களோடு டோம்பரி மலையைவிட்டு இறங்கி, குந்தி காவல் நிலையத்தை நோக்கி கருமேகம்போல நகர்ந்தான்.

நேரம் காலை 10.12ஐ தொட்டுவிட்டது. திட்டமிட்டபடி
சீறிப் பாய்கிற ஈட்டிகளும், அம்புகளும், சுழன்று பறக்கும் கோடாலிகளும்…. அந்தக் காவல் நிலையம் ஒரு போர்களம் போல் காட்சியளித்தது

போலீஸ் அதிகாரிகளும், கான்ஸ்டபிள்களும் செய்வதறியாது திணறிப்போய் நாலாபுறமும் சிதறி ஓடுகிறார்கள். கூட்டத்தை நோக்கி ரகுந்ராம் என்ற போலீஸ்காரன் சுட ஆரம்பிக்கிறான் அவன் குதிரையை இழுக்கும் முன்பு முண்டாவின் கையிலிருந்த அம்பு அவன் குரல்வளையைக் குத்தி நிற்கிறது. அவன் நின்று நிதானித்து காவல் நிலையத்தின் வாசலில் வீழ்கிறான்

இப்படித்தான் ஆங்கிலேயர்களை அவன் உண்டு இல்லை என்று ஆக்கி வைத்தான்

1889 தொடங்கி -1895ஆம் ஆண்டு வரை இப்படியான ஒரு வீரஞ்செறிந்த யுத்தத்தைத் தான் அந்தப்பகுதியில் பிர்சா நிகழ்த்திக்கொண்டிருந்தான். இழப்புகளைக் கண்டு அஞ்சாது மேலும் மேலும் திடீர் திடீரென்று ஏறியடித்த பழங்குடிகளின் வீரத்துக்குமுன், கட்டற்ற போர்முறையின் கதிகலக்கும் வடிவத்துக்குமுன், குகைகளுக்குள்ளிருந்து எழும் மாய வியூகங்களுக்குமுன் தாக்குப் பிடிக்க முடியாமல், பல இடங்களில் பிரிட்டிஷ் படைகள் தொடர்ந்து மண்டியிட்டன பல்லாயிரம் சிப்பாய்கள் படைகளைவிட்டு தப்பியோடினர்.

அவமானத்தால் கூனிக் குறுகிய அதிகாரிகள், பிர்சாவை எப்படியாவது பிடித்து இந்த போரை தமதாக்கிவிட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தனர். “இது ஒரு ஆபத்தான சமிங்கை. இதை இப்போதே முடிக்காவிட்டால் நமது அரசுக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும்” என்று அவ்வப்போது அரக்கபரக்க ஆலோசனைக் கூட்டங்களை நட்த்திக் கொண்டிருந்தார்கள்.

அப்படி ஒரு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆகஸ்ட் 23, 1895 அன்று சூழ்ச்சி செய்து, பிர்சாவை கைது செய்து, சிறைக் கொட்டடியில் அடைக்கிறார்கள்

கொடூரமான சித்திரவதைக்குப் பின்பு 1897-ல் விடுதலையான பிர்சா, மீண்டும் தீவிரமாக இயக்கப் பணிகளை முன்னெடுக்கிறார் .சினம்கொண்ட பிரிட்டிஷ் அரசு, அவரை 1900-ல் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தது

1900ஆம் வருடம் ஜீன் 8ஆம் தேதி.

நள்ளிரவு நெருங்கிக்கொண்டிருந்த்து

மெல்ல மெல்ல அடியெடுத்து நிழல்களைப் போல் நடந்து வந்தார்கள் வெள்ளை சிறையதிகாரிகள். கையில் இருந்த பொட்டலத்தைப் பிரித்து, குடிக்க வைத்திருந்த தண்ணீரில் அதைக் கலந்துவிட்டு நிம்மதியாகத் தூங்கப்போனார்கள்

ஜூன் 9ஆம் தேதி அதிகாலை.

ஒரு மாபெரும் வரலாற்றை எழுதிக்காட்டிய, ஆதிவாசிகளின் நம்பிக்கை ஒளியாய் இருந்த, எதிரிகளின் செவிப்பறையில் ஓயாத பேரிடியாய் ஒலித்துக்கொண்டிருந்த மகோன்தமான வீரன், அடிபணியாத தலைவன், தனது 25வது வயதில், மர்மமான முறையில் ராஞ்சி சிறையின் 11ஆம் அறையில் இறந்துகிடந்தார்.

#

நூறு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அப்போது எப்படியிருந்தார்களோ, என்ன மாதிரியான துன்பங்களை அனுபவித்தார்களோ, அதேநிலையில் தான் பழங்குடிகள் இன்னும் இருக்கிறார்கள். அதே வகையான சுரண்டலைத் தான் இப்போதும் அனுபவிக்கிறார்கள். பெயர் அறியாத நோய்களால், ரத்த சோகையால், பட்டினியால், போதிய மருத்துவமின்னமையால், போதிய உணவின்மையால் காப்பகங்களால் வனத்துக்கு வெளியேயும் வனத்துக்கு உள்ளேயும் தினம்தினமும் ஆயிரக்கணக்கானோர் செத்துக்கொண்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை அன்னியர்களிடம் இழந்துகொண்டிருக்கிறார்கள். தினம்தினம் தங்களது பெண்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். துயரம் நிறைந்த தங்களது வாழ்வை மெளனமாக கடந்துகொண்டிருக்கிறார்கள். அந்த மெளனம் பொருள் பொதிந்தது. அதுதான் இந்த மலைகளின் இண்டு இடுக்குகளெங்கும் பல்வேறு வடிவங்களில் போராடும், புதிய புதிய பிர்சாக்களை மீண்டும் மீண்டும் பிறக்கவைத்துக் கொண்டிருக்கிறது .

பிர்சா முண்டாக்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

பதிவு: LAKSHMANASAMY ODIYEN RANGASAMY

பதிவு நாள்: 15 நவம்பர் 2017