”பாஜகவில் சேர எனக்கு அழைப்பு வந்தது”: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

”பாஜகவில் சேர எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ஒருபோதும் அக்கட்சியில் நான் சேர மாட்டேன்’’ என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க தனது எம்எல்ஏக்கள் 7 பேருக்கு தலா ரூ.25 கோடி கொடுக்க பாஜக முன்வந்தது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் கூறினார். இந்த குற்றச்சாட்டை மறுத்த பாஜக,டெல்லி போலீஸில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கல்வி அமைச்சர் ஆதிஷி ஆகியோர் மீது புகார் அளித்தது.

மேலும், மதுபான கொள்கை ஊழல் வழக்கில், 5 முறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை என டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் நேற்று முன்தினம் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் கிராரி என்ற இடத்தில் அரசுப்பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டும் விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாஜக எங்களுக்கு எதிராக சதி செய்கிறது. இந்த முயற்சியில் அவர்கள் தோல்வியடைவர். நான் அவர்களுக்கு எதிராக செயல்படுகிறேன். இந்த நிலைப்பாட்டை கைவிட மாட்டேன். நான் பாஜகவில் சேர வேண்டும் என கூறுகின்றனர். ஆனால், நான் ஒருபோதும் சேர மாட்டேன் என கூறிவிட்டேன்.

நான் எதற்கு பாஜகவில் இணைய வேண்டும்? நீங்கள் பாஜகவுக்கு சென்றால், நீங்கள் செய்த குற்றங்கள் எல்லாம் மன்னிக்கப்படும். நாங்கள் என்ன தவறு செய்தோம்? நாங்கள் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டுகிறோம். சாலைகள் போடுகிறோம். கழிவுநீர் கால்வாய்களை சரி செய்கிறோம். இது குற்றமா?

இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.