“கவுதமி டெல்லி சென்று மோடியிடம் நேரில் விளக்கம் கேட்கலாமே”: அ.தி.மு.க. பதிலடி!

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில், கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.4) மாலை 5 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு வரை அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. டெல்லியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவர்களும் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை குறித்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்துவிட்டார் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து நடிகை கவுதமி நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, அவருக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை, திடீரென உயிரிழந்தது போன்றவை குறித்த கேள்விகளுக்குப் பதில்கள் இல்லை. இந்த விவகாரம் குறித்த விஷயங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன.

அவரை நேரில் பார்த்து விசாரிக்க முக்கியமானவர்களுக்கே அனுமதி அளிக்கப்படவில்லை. தமிழக அரசுக்குத் தலைமை தாங்கியவரின் மருத்துவ சிகிச்சை குறித்து ஏன் இத்தனை ரகசியங்கள்? யாருடைய கட்டளைப்படி அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை? அவருடைய மருத்துவ சிகிச்சை குறித்த முடிவுகளை எடுத்தவர் யார்? மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு யாரிடம் உள்ளது? இதுதொடர்புடைய கேள்விகள் மக்களிடம் நெருப்பாகக் கொதித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றை நான் உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.

இக்கேள்விகள் பதிலளிக்கப்படாமல் இருந்துவிடக் கூடாது. மாநில முதல்வரின் மரணம் குறித்த தகவல்களை அறிந்துகொள்ள ஒரு குடிமகனுக்கு உரிமை உண்டு. இந்த விஷயத்தில் நாட்டு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்” என எழுதியுள்ளார்.

கவுதமியின் கடிதம் குறித்து அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறும்போது,

“அம்மாவின் மரணம் குறித்து விளக்கம் கேட்கும் நடிகை கெளதமி, இன்று மாலையே விமானம் ஏறி டெல்லி சென்று மோடியிடம் நேரில் விளக்கம் கேட்கலாமே! அம்மா சிகிச்சை பெற்றபோது அது குறித்த விவரங்களை பிரதமர் அலுவலகத்தில் இருந்து தினமும் கேட்டறிந்தார்கள். மத்திய அரசின் அதிகாரிகள், அமைச்சர்கள், கவர்னர் எனப் பலரும் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து அம்மாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார்கள். அவர்கள் மருத்துவர்களிடம் பேசினார்கள்.

அம்மாவின் உடல்நிலை குறித்து அதிமுக மட்டுமே தகவல் சொல்லியிருந்தால் கவுதமிக்குச் சந்தேகம் வரலாம். ஆனால் பார்க்க வந்த அனைவருமே செய்தியாளர்களிடம் என்ன தெரிவித்தார்கள்? அம்மா நன்றாக உள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என்று கூறவில்லையா? இது கவுதமிக்குத் தெரியாதா?

அம்மாவின் உடல்நிலை குறித்த தகவல்களை எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் எனப் பலரும் சொல்லிவந்தார்களே! எய்ம்ஸ் மருத்துவர்கள் அரசு மருத்துவர்கள்தானே! லண்டன் மருத்துவர் அதிமுகவைச் சேர்ந்தவரா? நேற்றுகூட அப்பல்லோ மருத்துவர்களும் நர்ஸுகளும் அம்மா குறித்து பேசியுள்ளார்கள் இல்லையா! ஒருவர் ஐசியுவில் மருத்துவ சிகிச்சை எடுக்கும்போது யாரும் அவரைப் பார்க்கமுடியாது என்பதுதானே யதார்த்தம்!

அம்மா என்றால் ஒரு பிம்பம் இருக்கிறது இல்லையா? அப்படிதான் அவரை எங்கும் பார்க்க முடியும். அதைத்தான் அவர் விரும்புவார். அம்மாவை போயஸ் கார்டனில் பார்க்கும்போதும் அவருடைய வழக்கமான தோற்றத்தில் வந்துதான் நம்மைச் சந்திப்பார். எனவே மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும்போது யாரையும் பார்க்க அவர் விரும்பவில்லை. வதந்தி பரப்புபவர்களின் பட்டியலில் கவுதமியும் இணைந்துவிட்டார் என்றுதான் சொல்ல முடியும்” என்றார் சி.ஆர்.சரஸ்வதி.