பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் திடீர் மரணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்துவந்த கன்னட திரையுலகின் முன்னணி நாயக நடிகர் புனித் ராஜ்குமார், வழக்கம்போல் தனது இல்லத்தில் இன்று (29-10-2021) காலை உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்தார். கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 46.

0a1d

புனித் ராஜ்குமாருக்கு அஸ்வினி என்ற மனைவியும், வந்திதா, த்ரிதி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.

புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

புனித் ராஜ்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”மறைந்த பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமார் அவர்களின் மகனான பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் அவர்களின் மறைவை அறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

எங்கள் இருவரது குடும்பங்களும் பல்லாண்டுகளாக நல்ல உறவைப் பேணி வந்துள்ளோம். அந்த வகையில் தனிப்பட்ட முறையிலும் இது எனக்கு இழப்பு ஆகும். பெரும்புகழ் கொண்ட நட்சத்திரமாக விளங்கியபோதும் எளிமையான மனிதாரகவே புனித் ராஜ்குமார் இருந்தார்.

தலைவர் கலைஞர் அவர்களின் மறைவுக்கு தமது குடும்பத்தின் சார்பில் இரங்கலை தெரிவிக்க கோபாலபுரம் இல்லம் தேடி அவர் வந்தது இன்னும் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகிறது.

புனித் ராஜ்குமாரின் மறைவால் கன்னடத் திரையுலகம் தன் மிகச் சிறந்த சமகால அடையாளங்களுள் ஒருவரை இழந்துள்ளது. இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பால் தவிக்கும் புனித் ராஜ்குமார் அவர்களின் குடும்பத்தினருக்கும் கர்நாடக மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.