நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமாக மனோஜ் மரணம்: முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 48.

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள பல்கலைக் கழகத்தில் நாடகக்கலை படித்து வந்த இவர், 1999-ம் ஆண்டு வெளியான ‘தாஜ்மஹால்’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தை பாரதிராஜா இயக்கினார். இதைத் தொடர்ந்து, கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா, ஈரநிலம், சமுத்திரம், அன்னக்கொடி என பல படங்களில் நடித்தார். கடைசியாக விருமன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

‘சாதுரியன்’ என்ற படத்தில் நடிக்கும்போது, அதில் நாயகியாக நடித்த மலையாள நடிகை நந்தனாவை காதலித்த மனோஜ் பாரதிராஜா, பெற்றோர் சம்மதத்துடன் அவரை 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மதிவதனி, அர்த்திகா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளன. இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் இருந்த அவர், இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர், 2023-ல் ‘கார்த்திகை திங்கள்’ என்ற படத்தை இயக்கினார். இதில் பாரதிராஜாவும் நடித்திருந்தார்.

தொடர்ந்து குணசித்திர வேடங்களில் நடித்து வந்த மனோஜுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் இருதய பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், மாரடைப்புக் காரணமாக நேற்று அவர் திடீரென மரணமடைந்தார். அவர் மரணம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு உறவினர்கள், திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மனோஜ் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் பாரதி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மஹால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர் மனோஜ். இளம்வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

நேரில் அஞ்சலி:

சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீட்டில் அஞ்சலிக்காக மனோஜின் உடல் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில், “திரைப்பட நடிகரும் – இயக்குநர் இமயம் பாரதிராஜா சாரின் அன்பு மகனுமான சகோதரர் மனோஜ் கே.பாரதி , உடல்நலக்குறைவால் மறைந்த நிலையில், நீலாங்கரையில் உள்ள அவர்களது இல்லத்துக்கு சென்று, முதல்வருடன், மனோஜின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். அவரைப்பிரிந்து வாடும் பாரதிராஜா சார் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆறுதலையும் – இரங்கலையும் தெரிவித்தோம்’ எனத் தெரிவித்துள்ளார்.