“பாடகி கெனிஷாவோடு சேர்ந்து ’ஆன்மிக மையம்’ தொடங்கும் என் திட்டத்தை தகர்க்க சதி”: நடிகர் ஜெயம் ரவி குற்றச்சாட்டு!

”பாடகி கெனிஷாவோடு என்னை இணைத்துப் பேசுவது தவறு. அவரோடு சேர்ந்து ஒரு ’ஆன்மிக மையம்’ – ‘ஹீலிங் செண்டர்’ ஆரம்பிக்க முடிவு செய்தேன். அதை தகர்ப்பதற்காக இப்படி பேசப்படுகிறதோ என்று சந்தேகமாக இருக்கிறது” என்று பிரபல நடிகர் ஜெயம் ரவி கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராகத் திகழும் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டுப் பிரிய முடிவு செய்திருப்பதாக கடந்த (செப்டம்பர்) 9ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நீண்ட கால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. என்னை சார்ந்தவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், அவர்களின் நல்வாழ்வுக்காக எடுக்கப்பட்டது” என்று கூறியிருந்தார்.

இந்த அறிக்கை வெளியான மறுநாள் (செப்டம்பர் 10ஆம் தேதி) ஜெயம் ரவி விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்ற செய்தி வெளியானது.

இதற்கு அடுத்த நாள் (செப்டம்பர் 11ஆம் தேதி) ஜெயம் ரவிக்கு பதில் அளிக்கும் வகையிலும், அவர் மீது குற்றம் சாட்டும் வகையிலும் ஆர்த்தி ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், “சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்…

…என் கணவரிடம் மனம் விட்டுப் பேச, என் கணவரை சந்திக்க நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தை சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல…” என்று ஆர்த்தி கூறியிருந்தார்.

இந்நிலையில், ஜெயம் ரவியும், பெங்களூருவில் வசிக்கும் பாடகி கெனிஷா பிரான்சிஸும் நெருக்கமாகப் பழகி வருவதாவும், இருவரும் ஆர்த்தியின் காரில் அடிக்கடி உல்லாசமாக கோவா போய் வருவதாகவும், கெனிஷாவுடனான தொடர்பு காரணமாகவே மனைவி ஆர்த்தியை ஜெயம் ரவி விவாகரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி பரபரப்பைக் கிளப்பின.

இதுநாள் வரை பெண்கள் தொடர்பான சர்ச்சைகள் எதிலும் சிக்காத ஜெயம் ரவி தற்போது கெனிஷாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்படுவது குறித்தும், அவரது மனைவி ஆர்த்தியின் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் செய்தியாளர்கள் ஜெயம் ரவியிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

உங்கள் விவாகரத்து முடிவு வருத்தம் அளிக்கிறதா?

நான் எடுத்த விவாகரத்து முடிவு வருத்தம் அளிப்பதாக இருந்தாலும், வேறு வழி இல்லை. மேலும், உலகில் இது ஒன்றும் நடக்காததோ, புதியதோ அல்ல. இது எனது வாழ்க்கையில் ஒரு வேகத்தடை மாதிரி தான். அதனால் இதை கடந்தும் வருவேன்.

நீங்கள் எடுத்த விவாகரத்து முடிவு தனக்கு தெரியாது என்று ஆர்த்தி கூறியுள்ளாரே…?

நான் எடுத்த விவாகரத்து முடிவு தனக்குத் தெரியாது என்று அவர் சொல்வது தவறாகத் தோன்றுகிறது. அதில் லாஜிக்கும் இல்லை. ஏற்கெனவே இரண்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறேன். அதை பெற்றுக்கொண்டதாகவும் எனக்கு தகவல் வந்துள்ளது. அவரது வீட்டார் என்னையும் அவரையும் அழைத்துப் பேசினார்கள். எங்கள் வீட்டில் வைத்தும் பஞ்சாயத்து நடந்தது. ஒன்றரை மாதங்களுக்கு முன்பே கோர்ட்டுக்குச் சென்றுவிட்டேன். அப்போதே விவாகரத்து செய்யப் போகிறேன் என்று கிசுகிசுக்கள் வந்தன. இவ்வளவு நடந்த பிறகும் தனக்குத் தெரியாது என்று சொன்னது அதிர்ச்சியாக இருக்கிறது. தெரியாமல் எப்படி இருக்க முடியும்? எனக்குப் புரியவில்லை.

நீங்கள் தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் இருந்ததாக கூறுவது பற்றி…

நான் தொடர்புகொள்ள முடியாத இடத்தில் இருந்ததாக சொல்வதும் சரியல்ல. எனது மகன்களுடன் தான் இருந்தேன். மகன்களுக்காக அமைதியாக இருக்கிறேன். சட்டரீதியாக செல்கிறேன்.

உங்கள் மகன்கள் யாருடன் இருப்பார்கள்?

எனது 2 மகன்களும் என்னுடன் எப்போதும் போல் இருப்பார்கள். அவர்களை எப்போதும் கைவிட மாட்டேன். ஜூன் மாதம் கூட மூத்த மகனின் பிறந்த நாளை அவனுடன் சேர்ந்து கொண்டாடினேன்.

உங்கள் விவாகரத்து முடிவு பற்றி மகன்களிடம் விவாதித்தீர்களா?

மூத்த மகனிடம் சொன்னேன். அம்மாவுடன் சேர்ந்து இருக்கலாமே என்றான். அவன் சின்ன பையன் என்பதால் அப்படி சொல்கிறான். எனக்கு என்ன நடக்கிறது என்பது எனக்குத் தானே தெரியும்.

விவாகரத்து விவகாரத்தில் உங்கள் அம்மா, அப்பா கருத்து என்ன?

அவர்கள் எனது முடிவின்படியே போகிறார்கள்.

பாடகி கெனிஷாவுடன் உங்களை இணைத்துப் பேசுவது பற்றி…

முன்பு ஒரு பெண்ணுடன் என்னை இணைத்துப் பேசினார்கள். நல்லவேளையாக அவருக்கு திருமணம் நிச்சயமாகி போய்விட்டார். இப்போது பாடகி கெனிஷாவுடன் இணைத்துப் பேசுகிறார்கள். இது தவறு. அவருக்கு அம்மா, அப்பா இல்லை. அவருடன் என்னை இணைத்துப் பேசினால் அது பேசியவர்களுக்குத் தான் அசிங்கம். அவர் ஆன்மிகவாதி. சைக்காலஜிஸ்ட். நிறைய பேருக்கு உதவிகள் செய்திருக்கிறார். மன அழுத்தத்தில் இருந்த எத்தனையோ பேரை குணப்படுத்தி இருக்கிறார். அவர் மிகவும் நல்லவர். அவரை என்னோடு இணைத்துப் பேசுவது வருத்தமாக இருக்கிறது. நான் அவரோடு சேர்ந்து ஒரு ‘ஆன்மிக மையம்’ – ’ஹீலிங் செண்டர்’ ஆரம்பிக்க முடிவு செய்தேன். அதை தகர்ப்பதற்காக இப்படி பேசப்படுகிறதோ என்று சந்தேகமாக இருக்கிறது. அடுத்து என்னை மார்பிங் செய்து போட்டோ வெளியிடுவார்களா என்று தெரியவில்லை.

நீங்கள் ஆர்த்தியின் காரில் கெனிஷாவுடன் சென்று ஊர் சுற்றியதாக கூறப்படுவது பற்றி…

நான் ஊர் சுற்றுகிற ஆள் இல்லை. மேலும், கார் யார் பெயரில் இருந்தாலும், அது என்னுடைய உழைப்பில், என்னுடைய பணத்தில் வாங்கியது. அதனால் அது என்னுடைய கார் தான். நான் வீட்டைவிட்டு வெளியேறியபோது எனது காரை மட்டும் எடுத்துக்கொண்டு, பணம் கூட எடுக்காமல் தான் சென்றேன். என்னுடைய காரில் நான் யாருடன் போக வேண்டும் என்று யாரும் கட்டளையிட முடியாது.

மற்றவர்கள் போல் இந்த விஷயத்தில் நடக்கக் கூடாது என்று பார்க்கிறேன். எனது பிரச்சனையில் ஒருநாள் உண்மை வரும். அது கோர்ட்டில் வரும். நான் சட்டத்தை நம்புகிறேன். நியாயம் கிடைக்கும். எனது இமேஜை அவ்வளவு சீக்கிரம் உடைக்க முடியாது. ஒரு நாள் உண்மை தெரியவரும்போது சாணியை திருப்பி அடிப்பார்கள்.