ஆயிரத்தில் இருவர் – விமர்சனம்

எதிரும் புதிருமான இரட்டையர்களின் வாழ்வில் நடக்கும் திருப்பங்களை வித்தியாசமாக செல்லும் படம் ஆயிரத்தில் இருவர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு தம்பதியருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. கதாநாயகன் வினய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இருவரும் எப்போதும் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள். தாயின் வயிற்றுக்குள் இருக்கும் போதே அடித்துக்கொள்ளும் அளவிற்கு இவர்கள் இருவருக்கும் எந்த ஒரு விஷயத்திலும் ஒத்துப்போவதில்லை.

ஒருநாள், வினய் குடும்பத்தினர் அனைவரும் குடும்பத்துடன் வெளியூர் செல்கின்றனர். அங்கு நாயகி ஸ்வஸ்திகாவை பார்த்து அவர் பின்னாடியே சென்று விடுகிறார் வினய். அப்போது தன் அப்பாவின் பல நாள் எதிரியான பங்காளியின் காரில் ஏறி சென்று விடுகிறார். இதை பார்க்கும் ஒருவர், வினய்யை பங்காளி கொலை செய்துவிட்டதாக கூறிவிடுகிறார். இதனால், கோபமடையும் வினய்யின் அப்பா, பங்காளியை கொன்று விடுகிறார்.

அந்தப் பெண்ணின் மீது கொண்ட காதலால் வினய், ஆந்திராவில் தங்கி விடுகிறார். ஆந்திரா ஜெயில் இருந்து வெளியே வரும் அப்பா, வினய் உயிரோடு இருப்பதை தெரிந்துக் கொள்கிறார். ஊருக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், ஆந்திராவிலேயே இருக்கும்படி கூறுகிறார். எனவே, ஆந்திராவிலேயே தங்கும் வினய், ஹவாலா மோசடி செய்து வருகிறார்.

இது ஒருபுறமிருக்க, திருநெல்வேலியில் இருக்கும் வினய், வேலைக்கு போகாமல், சொத்தில் பங்கு கேட்டு தொந்தரவு கொடுத்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில், இறந்துபோன பங்காளியின் தம்பி ஒரு வினய்க்கு தொந்தரவு கொடுக்க, ஊரில் சொத்து இருப்பதை அறிந்து ஆந்திராவில் இருந்து மற்றொரு வினய் ஊருக்கு வர, இருவருக்குள் நடக்கும் ஆள்மாறாட்டமே படத்தின் மீதிக்கதை.

வினய் இரண்டு வேடங்களில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார். படத்தில் கேஷ கம்பாட்டி, சாக்‌ஷி சௌத்ரி, ஸ்வஸ்திகா ஆகியோர் படத்திற்கு கலர்ப்புல்லாக உதவியிருக்கிறார்கள். அருள் தாஸின் காமெடி படத்திற்கு பெரிதும் பலம் சேர்த்திருக்கிறது. தன்னுடைய அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் மயில்சாமி.

பல வெற்றிப் படங்களை இயக்கிய சரண், இப்படத்தை இயக்கி இருக்கிறார். ஆள்மாற்றம், காமெடி, ஹவாலா பணம் ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார். படம் கலர்ப்புல்லாக இருந்தாலும், திரைக்கதை ஜொலிக்க வில்லை. பல கிளைக்கதைகளை தவிர்த்திருக்கலாம். காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியுள்ள இப்படத்தில், கடைசி 15 நிமிட காமெடி காட்சி மட்டுமே கைகொடுத்திருக்கிறது.

பரத்வாஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ரசிக்கும் அளவிற்கு கொடுத்திருக்கிறார். கிருஷ்ணா ரமணனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘ஆயிரத்தில் இருவர்’ குழப்பவாதி.