”பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கின்றன வன்முறை திரைப்படங்கள்”: ‘ஆலன்’ இயக்குநர் ஆர்.சிவா

3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா, ‘அருவி’ மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன் வழங்குகிறார்.

‘ஆலன்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குநர் கோபிநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.



தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர்.சிவா விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசுகையில், ”இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் எழுத்தாளர்களைப் பற்றி பேசி இருக்கிறேன். ஏன் எழுத்துக்களை பற்றி பேசினேன் என்றால்,  என்னுடைய 12 வயது முதல் 18 வயது வரை நிறைய புத்தகங்களை வாசித்திருக்கிறேன். கையில் கிடைக்கும் புத்தகங்கள் அனைத்தையும் படித்திருக்கிறேன். என்னுடைய பெற்றோர்கள் எப்போதும் என்னுடைய வாசிப்பிற்கு ஆதரவாகவே இருந்தார்கள். இதற்காகவே அவர்களுக்கு இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்க்கைக்கு புத்தகத்தை படிப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் நான் தெரிந்து கொண்டேன். இயக்குநர் கே.பாக்யராஜ் எழுதிய ’திரைக்கதை எழுதுவது எப்படி?’ என்ற புத்தகத்தை தேடி வாசித்த பிறகு தான் சினிமா மீது எனக்குள் ஒரு ஆவல் வந்தது. நாமும் ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும்… இயக்குனராக வேண்டும்… என்று எண்ணி சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயில்வதற்கு முயற்சித்தேன். ஆனால் குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாகவும், குடும்ப பொறுப்பினை சுமக்க வேண்டும் என்பதற்காகவும் சிங்கப்பூருக்கு சென்றேன். அங்கு என்னுடைய வாழ்க்கை முப்பது ஆண்டுகள் கழிந்தது. அங்கு ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியராக ஒரு நிறுவனத்தை தொடங்கி இன்று வரை வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்.

அங்கிருந்து இங்கே பார்க்கும்போது, இங்கு எழுத்திற்கு கொடுக்கும் மதிப்பை ஆய்வு செய்தேன். இங்கு புத்தகம் வாசிப்பது குறைந்துவிட்டது. பெற்றோர்களும் குழந்தைகளுக்கு புத்தகம் வாசிப்பதை ஊக்கப்படுத்தவில்லை. மிகப்பெரிய தவறினை செய்து கொண்டிருக்கிறோம். பாட புத்தகங்கள் படிப்பது மட்டும் வாழ்க்கை அல்ல. அதைக் கடந்து வாழ்வியல் தொடர்பாக ஏராளமான எழுத்துகள் இங்கு இருக்கிறது. தமிழில் லட்சக்கணக்கான எழுத்துக்கள் இருக்கிறது. லட்சக்கணக்கான புத்தகங்கள் இருக்கிறது. தயவுசெய்து உங்கள் வீட்டுப் பிள்ளைகளை புத்தகங்களை வாசிக்க சொல்லுங்கள்.

நான் புத்தகங்களை வாசிக்க தொடங்கும்போது வயது 12. எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது என்னுடன் 18 மாணவர்கள் படித்தனர். புத்தகம் வாசித்ததால் ஒழுக்கமானவனாக வாழ்ந்து வருகிறேன். அதனால் புத்தகங்களை படிக்குமாறு சொல்லிக் கொடுங்கள். ஏனென்றால் வாழ்க்கை அதில் தான் இருக்கிறது.

கோவிட் காலகட்டத்தில் எனக்கு நான்கு மாதம் ஓய்வு கிடைத்தது. அப்போதுதான் என் ஆழ்மனதில் விதைத்த விதை எட்டிப் பார்த்தது. ஏதாவது எழுத வேண்டும்… ஏதாவது செய்ய வேண்டும்… என்ற உந்துதல் ஏற்பட்டது. அதனால் தான் இரண்டாவது படமாக ‘ஆலன்’ எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறேன். இது ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை.

ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 2018ஆம் ஆண்டில் ஐநா சபையில் கிரேட்டா என்ற ஒரு சிறுமி இந்த உலகத்தினரை பார்த்து ஒரு கேள்வியை கேட்கிறார். அவர் துணிச்சலாக கேட்ட  கேள்விக்கான காரணம் என்ன? புவி வெப்பமயமாதல். இந்த பூமியில் 1. 5° செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்திருக்கிறது. ”இந்த உலகம் எங்களுக்கானது. காற்று எங்களுக்கானது. நீர் எங்களுக்கானது. இதை அசுத்தம் செய்வதற்கு நீங்கள் யார்?” என ஒரு சின்ன பெண் இந்த கேள்வியை கேட்டார். இந்த உலகம் நமக்கானது மட்டுமல்ல. நமது சந்ததிகளுக்குமானது.  அடுத்த தலைமுறையினருக்கும் இதனை விட்டுச் செல்ல வேண்டும். அந்தப் பெண் நாம் செய்த தவறுகளை சுட்டிக் காட்டினார்.

நாம் ஏதோ இயந்திரத்தனமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். திரும்பிப் பார்க்கிறோம். கிட்டத்தட்ட அதே போல் தான் இந்த படமும் இருக்கும்.‌

இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் சென்று இருந்தோம். அங்கு நான்கு ஐந்து சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  அவர்களுக்கு ஐந்து அல்லது ஆறு வயது தான் இருக்கும். அவர்களில் ஒருவன் ஓடி வந்து என்னிடம் இது திரைப்படமா? எனக் கேட்டான். ‘ஆம்’ என்று பதிலளித்துவிட்டு, நடிக்கிறாயா?  என கேட்டேன். வில்லனாக நடிக்கிறேன் என பதில் அளித்தான். ஏன் என்று கேட்டபோது, ‘அப்போதுதான் வெட்டலாம். குத்தலாம்’ என பதில் அளித்தான். ஒரு பிஞ்சு மனதில் எந்த மாதிரியான நஞ்சினை விதைத்திருக்கிறோம் என அதிர்ச்சி அடைந்தேன். வன்முறை அவனுக்கு இங்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. இது மிகப் பெரிய பாவம் இல்லையா? மனசாட்சி இல்லையா? எதை விதைக்கிறோம்..? இங்கு நல்ல விசயத்தை சொல்வதற்கு .. புத்தகத்தை படியுங்கள் என்று சொல்வதற்கு சிங்கப்பூரிலிருந்து நான் இங்கு வர வேண்டியதாக இருக்கிறது. நான் இங்கு சம்பாதிப்பதற்காக வரவில்லை. இது என் மனசின் ஆதங்கம்…! வேதனை…!  வலி…! எதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்? .. இதுதான் என்னை இந்த படத்தை இயக்கத் தூண்டியது.

எழுத்தைத்தான் இந்தப் படத்தில் அழுத்தமாக பேசி இருக்கிறேன். எழுதினால் யாருக்கு பயன்படும்…. எழுத்தினால் இந்த உலகத்திற்கு என்ன நன்மை கிடைக்கும்? ஒரு புத்தகம் ஆயிரம் நண்பர்களுக்கு சமம். ஒரு புத்தகம் வாழ்க்கையை மாற்றிவிடும். நான் இங்கு நிற்பதற்கும் புத்தகங்கள் தான் காரணம். நான் ஒரு ஒழுங்கான வாழ்க்கையையும்… அர்த்தமுள்ள தேடலையும் எனக்குள் ஏற்படுத்தியது புத்தகங்கள் தான். நான் என் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதற்கும் நண்பர்கள் காரணமல்ல. புத்தகங்கள் தான் காரணம்.

என் குருநாதர் கே.பாக்யராஜ். அவருடைய எழுத்தில் வெளியான பாக்யா எனும் வார இதழின் முதல் பிரதியை வாங்குவதற்காக 12 கிலோமீட்டர் அதிகாலையிலேயே பயணித்து வாங்கி படித்திருக்கிறேன். அந்த அளவிற்கு வாசிப்பின் மீது தீரா காதல் எனக்கு உண்டு. ஆனால் சிங்கப்பூர் சென்ற பிறகு அங்கு படிக்க முடியவில்லை. ஏனெனில் அது ஒரு இயந்திர வாழ்க்கை. அதனால் இங்கு சிறப்பு விருந்தினராக கே.பாக்யராஜ் வருகை தந்ததற்கு அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படம் ‘ஆலன்’ அனைவருக்கும் பிடிக்கும். கஷ்டப்பட்டு படத்தை உருவாக்கி இருக்கிறோம். ஜெர்மனி, காசி, வாரணாசி, ரிஷிகேஷ், காரைக்குடி, கொடைக்கானல், ராமேஸ்வரம் என பல இடங்களுக்கு சென்று இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். இந்த படத்தின் கதை எனக்கு பிடித்திருந்ததால் தயாரிப்பில் எந்த சமரசமும் இன்றி வன்முறையில்லாமல் தரமாக உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படத்தை வன்முறை கலந்து என்னால் உருவாக்கி இருக்க முடியும். ஆனால் கதையின் நாயகன் அந்த வன்முறையையும் கடந்து செல்கிறான். வாழ்க்கையை பார்வையிடுகிறான். ஒரு பலசாலியை எளியவன் தாக்க முடியுமா? எளியவன் திருப்பித் தாக்க முடியாத ஒரு  விசயத்தை நாம் ஏன் திணிக்கிறோம்? எல்லாம் கலந்தது தான் இந்த உலகம் என்று சொல்வார்கள். இல்லை என்று நான் மறுக்கவில்லை‌. ஆனால் இங்கு எது அதிகம் தேவைப்படுகிறது? அன்பும் காதலும் தான். அதுதான் அதிகம் தேவை.  இயற்கையை கொண்டாடுங்கள். அன்பை கொண்டாடுங்கள். காதலை கொண்டாடுங்கள். இந்த உலகம் அமைதியாக வாழும். இந்த தலைமுறை அமைதியாக.. பாதுகாப்பாக.. வாழும். வீட்டில் மட்டும் பாதுகாப்பு கொடுத்தால் போதாது. வெளியில் செல்லும்போதும் பாதுகாப்பு இருக்க வேண்டும்.

மேலும் இந்தப் படத்திற்காக நடித்த நடிகர்கள், நடிகைகள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.