குறைந்த விலையில் மருந்துகள் விற்கும் ‘முதல்வர் மருந்தகம்’: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவர் 24) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில், கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 1000 மருந்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
கல்வியும், மருத்துவமும்தான் திராவிட மாடல் அரசின் இரு கண்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.
கடந்த ஆகஸ்ட் 15 விடுதலை நாள் நிகழ்ச்சி கோட்டையில் நடைபெற்றபோது, கொடியேற்றிவிட்டு உரையாற்றும்போது, ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய வகையில், முதல் கட்டமாக ஆயிரம் மருந்தகங்கள் திறக்கப்படும் என்று அறிவித்தேன்.
அந்த அறிவிப்பு இன்றைக்கு செயல்பாட்டுக்கு வருவது பெருமகிழ்ச்சியை தருகிறது. நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு தொடர்ந்து, அதிகளவில் மருந்துகளை வாங்க வேண்டிய காரணத்தால், அதிகமான செலவு ஆகிறது என்று பலரும் கவலைப்பட்ட காரணத்தால், இந்த மருந்தகங்களை திறக்க நாங்கள் திட்டமிட்டோம்.
சொன்னது போன்றே, இன்றைக்கு ஆயிரம் மருந்தகங்களை திறந்திருக்கிறோம்.இந்த மருந்தகங்களைச் சிறப்பாக செயல்படுத்த மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும், மானியம் மற்றும் தேவையான கடனுதவியை அரசு வழங்கியிருக்கிறது. இந்த மருந்தகங்களை அமைக்க விருப்பமுள்ள B.Pharm, D.Pharm முடித்தவர்களிடம் இருந்தும், இல்லை, அவர்கள் ஒப்புதலோடு தொழில்முனைவோர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தொழில் முனைவோருக்கு மூன்று லட்சம் ரூபாயும், கூட்டுறவுச் சங்கமாக இருந்தால் இரண்டு லட்சம் ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது. உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரொக்கமாகவும், மருந்துகளாவும் வழங்கப்பட்டிருக்கிறது.
அத்துடன், முதல்வர் மருந்தகங்களுக்கு தேவைக்கு ஏற்ப உடனடியாக அனுப்புகின்ற வகையில் மாவட்ட மருந்து கிடங்குகளில் மூன்று மாதத்துக்கு தேவையான மருந்துகளின் இருப்பு பராமரிக்கப்படுகிறது. சாலிகிராமத்தில், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் மத்திய மருந்து கிடங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. 38 மாவட்டங்களில், மாவட்ட மருந்து கிடங்குகள் அமைக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட மருந்து கிடங்குகளில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளான ஏசி, குளிர்சாதனப்பெட்டி, ரேக்குகள் மற்றும் கணினி என்று எல்லா வசதிகளும் அமைக்கப்பட்டிருக்கிறது.
மருந்து தேவைப் பட்டியல் பெறப்பட்ட 48 மணி நேரத்தில், மருந்துகளை வாகனங்கள் மூலம் இந்த முதல்வர் மருந்தகங்களுக்கு அனுப்பி வைக்க வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. முதல்வர் மருந்தகங்கள் சிறப்பாக பணியாற்றும் வகையில் மருந்தாளுநர் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு மூன்று கட்டமாக பயிற்சியும் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், B.Pharm, D.Pharm படித்த ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த முதல்வர் மருந்தகங்களில் சிறப்பு என்னவென்று கேட்டால், இங்கு பொது மக்களுக்கு 25 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் பொதுமக்களுக்கு, அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புக்கு ஆளாகியிருக்கக் கூடியவர்களுக்கு மருந்துகளை குறைந்த விலையில் முதல்வர் மருந்தகங்களிலேயே வாங்கி பயன்பெற முடியும்.
நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, கரோனா என்கிற பெரும் நோய்த்தொற்று பரவியிருந்த காலம். அப்போது மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு பல சிறப்பு முயற்சிகளை எடுத்தோம். வாரந்தோறும் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தி, எந்தளவுக்குச் சிறப்பாக செயல்பட்டு கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்தினோம் என்று உங்களுக்கு நன்றாக தெரியும்.
குழந்தைகள், மாணவர்கள், மகளிர், இளைஞர்கள், முதியவர்கள் என்று ஒவ்வொரு மக்களின் தனித்தனி தேவைகளை உணர்ந்து, பார்த்து, பார்த்து செய்து தருகிறோம். இந்த அணுகுமுறையால்தான் சமூக வளர்ச்சியில் தமிழகம் முன்னணி மாநிலமாக இன்றைக்கு வளர்ந்து கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது.வறுமையின்மை, பட்டினி ஒழிப்பு, தரமான கல்வி, பாலினச் சமத்துவம், தூய்மையான குடிநீர் குறைந்த விலையில், வேலைவாய்ப்பு, பொருளாதார குறியீடு, தொழில் உட்கட்டமைப்பு, சம வாய்ப்புகள், அமைதி, மருத்துவம், மக்கள் நல்வாழ்வு நுகர்வு உற்பத்தி என்று எல்லா குறியீடுகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
இதெல்லாம் நமக்கு நாமே வாசித்துக்கொள்ளும் பாராட்டுப் பத்திரங்கள் கிடையாது. மத்திய அரசின் நிதி ஆயோக் புள்ளிவிவரங்களே சொல்கிறது, நாட்டுக்கே முன்மாதிரியாக வழிகாட்டியாக இருக்கக்கூடிய கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், காலை உணவுத் திட்டம் என்று முற்போக்கான தொலைநோக்கான நாட்டுக்கே முன்னோடியான அத்தனை திட்டங்களையும் பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு இடையில் தான் செயல்படுத்தி வருகிறோம்.
மத்திய அரசு என்று சொல்லிக்கொள்ளும், ஒன்றிய அரசின் நெருக்கடி இருந்தாலும், அந்த நெருக்கடிக்களுக்கு மத்தியிலும், அது பற்றி கவலைப்படாமல் தமிழக நலன்களை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு, தமிழக மக்கள் மேல் நம்பிக்கை வைத்து இந்த திட்டங்களை நாங்கள் இன்று செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். இது எல்லாவற்றையும் மக்களுக்கான நம்முடைய கடமை என்று உணர்ந்து செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.
மக்களுக்கு நன்மை செய்வதில் நாம் கணக்கு பார்ப்பதில்லை. இந்த நேரத்தில் நான் அரசு அதிகாரிகளுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், இந்த முதல்வர் மருந்தகங்கள் என்ன நோக்கத்துக்காக தொடங்கப்பட்டிருக்கிறதோ அந்த நோக்கம் கொஞ்சம் கூட சிதையாமல் இன்னும் சிறப்பாக செயல்படுத்துகின்ற அந்த உறுதியை நீங்கள் எடுத்துக் கொள்ளவேண்டும். இப்போது திறக்கப்பட்டிருக்கும் ஆயிரம் மருந்தகங்கள் என்பது, முதல் கட்டம்தான். அடுத்தடுத்த கட்டங்களில், இந்த எண்ணிக்கையை அதிகரிக்கப் போகிறோம்.
ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, இந்தத் திட்டத்துக்கு மற்றொரு நோக்கமும் இருக்கிறது. B.Pharm, D.Pharm படித்த இளைஞர்களை சொந்தமாக தொழில் தொடங்குவதற்கான அடித்தளம் அமைப்பதுதான் அந்த நோக்கம். நான் முதல்வனால், இளைஞர்களின் திறன் வளர்க்கும் நம்முடைய திராவிட மாடல் அரசு இதுபோன்ற திட்டங்களால் இளைஞர்களை தொழில் முனைவோர்களாக்கி வருகிறது” என்று முதல்வர் பேசினார்.