சீமானின் ’நாம் தமிழர் கட்சி’யை தடை செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சியினர் பேசி வருவதால், அக்கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, கட்சியை தடை செய்ய வேண்டும் என்று புதுடெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் பெங்களூரு வா.புகழேந்தி மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக் கூட்டங்களில் பேசும்போது, கடுமையான மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவது, பெரியார் உள்ளிட்ட திராவிட இயக்க தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவது மற்றும் மதம், சாதி, இனம் என பேசி கலவரத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இவரை போலவே இவரது கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை முருகன், பிரச்சார மேடையை பயன்படுத்தி காலணியை தூக்கி பொதுமக்களிடம் காண்பிக்கிறார். அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசி வருகிறார். இவருடைய நடவடிக்கைகள் அனைத்தும் பெரியதொரு கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகும். அமைதியான முறையில் தேர்தல் நடத்த முயலும் தேர்தல் ஆணைய சட்ட விதிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

ஆகவே நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.