பராரி – விமர்சனம்

நடிப்பு: அரிசங்கர், சங்கீதா கல்யாண், புகழ் மகேந்திரன், குரு ராஜேந்திரன், பிரேம்நாத், சாம்ராட் சுரேஷ் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: எழில் பெரியவேடி

இசை: ஷான் ரோல்டன்

ஒளிப்பதிவு: ஸ்ரீதர்

படத்தொகுப்பு: சாம் ஆர்டிஎக்ஸ்

தயாரிப்பு: கலா பிலிம்ஸ் (பி) லிட்.

தயாரிப்பாளர்: ஹரிசங்கர்

வழங்குவோர்: இயக்குநர் ராஜுமுருகன்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் ஏ.நாசர்

திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜாபாளையம் கிராமத்தில், சாதிப் பிரிவினை நிலவுகிறது. மாறன் (அரிசங்கர்) மற்றும் அவரின் சமூக மக்கள் தினமும் ஊர்த்தெரு ஆட்களால் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர்.

அந்த கிராமத்திலுள்ள இரண்டு சாதியினருக்கும் பொதுவானதாக இருக்கும் கொட்டாங்கல் பாறையை, தன் வசமாக்க திட்டமிட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான சாதிய மோதலை உருவாக்குகிறான் மாற்று சமூகத்தைச் சேர்ந்த வேடி (குரு ராஜேந்திரன்). அதன் உச்சமாக மாறனின் சமூகத்திற்குத் தண்ணீர் மறுக்கப்படும் சூழல் உண்டாகிறது. இந்த நிலையில் சண்டை போடும் இரு சமூக மக்களில் சிலரைக் கர்நாடக ஜூஸ் தொழிற்சாலைக்கு வேலைக்கு அழைத்துச் செல்கிறார் அதே ஊரைச் சேர்ந்த காண்ட்ராக்டர்.

அங்கே சாதி பிரச்சினையைத் தாண்டி மொழியின வெறியைத் தூண்டும் வெறுப்பு பிரசாரத்தைச் செய்கிறது ஒரு அடிப்படைவாத கட்சி. தொழிற்சாலை முதலாளி தமிழ் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருந்தாலும் பிரச்சனைகள் ஆரம்பிக்கத் தொடங்குகின்றன.

இதற்கிடையே, மாற்று சாதியைச் சேர்ந்த தேவகி (சங்கீதா கல்யாண்) மாறனின் மீது காதல் கொள்கிறார். இந்த காதல் என்ன ஆனது? மொழியின வெறியிலிருந்து தமிழ் மக்கள் தப்பித்தார்களா ? அவர்களுக்குள் இருக்கும் சாதிவெறி மோதல் எங்கே போய் முடிகிறது? என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘பராரி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இடதுசாரித் தோழரின் துணையுடன் பக்குவமாகப் பிரச்னைகளைக் கையாள்வது, காதலிலிருந்து விலகி நிற்பது என முதிர்ச்சியான நடிப்பைத் தர முயன்றிருக்கிறார் நாயகன் மாறனாக நடித்திருக்கும் அரிசங்கர். எமோஷலான காட்சிகளில் அது கைகூடினாலும், ஆக்ரோஷமான காட்சிகளில் சற்றே தடுமாறியிருக்கிறார்.

நாயகனை விரட்டி விரட்டி காதலிக்கும் நாயகியாகச் சங்கீதா கல்யாண். கிளைமாக்ஸ் காட்சியின் வலுவைத் தாங்கும் அளவுக்கான சிறப்பானதொரு நடிப்பை தன் முதல் படத்திலேயே வழங்கியிருக்கிறார்.

சாதிப்பெருமையை தூக்கிக்கொண்டு வரும்படியாக பிரச்னை கிளப்பும் பாத்திரத்தில் பிரேம்நாத், மொழியின வெறியைச் சுவாசமாகக் கருதி வெறுப்பேற்றும் வேடத்தில் புகழ் மகேந்திரன் என தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை இருவரும் திறம்படச் செய்திருக்கிறார்கள்.

காதல் ஜோடிகளாக வருகிற இருவரின் நடிப்பிலும் குறையேதுமில்லை.

சமூகப் பிரச்னைகளை வெளிக்கொணர்வதில் நம்பிக்கை அளிக்கிறார் அறிமுக இயக்குநர் எழில் பெரியவேடி. சாதி, வர்க்கம், மொழியின வெறிக்கு எதிராகப் பல முக்கிய கேள்விகளை எழுப்பியிருக்கிறார். சாதியை வைத்து நடக்கிற அரசியல் அதனால் யார் பயனடைகிறார், இவற்றால் எளிய மக்களின் வாழ்க்கையில் ஏற்படுகிற இழப்பு என அனைத்திலும் மக்களின் கவனத்தை ஏற்படுத்த முயன்று அதில் ஓரளவிற்கு வெற்றியும் கண்டிருக்கிறார்.

தமிழக வட மாவட்ட கிராமத்தில் நிலவுகிற சிக்கலின் புள்ளியை கவனிக்க வைத்தமைக்காகவும், குறிப்பிட்ட இனக்குழுவையே எதிரிகளாக சித்தரிக்காமல் எல்லா நிலத்திலும் ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் எளியவர்களுக்கு உடன் நிற்கும் நம்பிக்கையை விதைத்ததற்கும் இயக்குநரை பாராட்டலாம்.

கிராமப்புற வாழ்க்கை மற்றும் கர்நாடக தொழில்துறை சூழலின் வேறுபாட்டை ஒளிப்பதிவு சிறப்பாகக் காட்டுகிறது ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரின் ஒளிப்பதிவு.

பன்றி சேஸிங் காட்சி, சண்டைக் காட்சிகள் ஆகியவற்றைப் படத்தொகுப்பாளர் சாம் ஆர்டிஎக்ஸ் சிறப்பாகக் கோர்த்திருக்கிறார்.

ஷான் ரோல்டன் இசையில் ‘உன் சாமி என் சாமி வேடியப்பன்’ என்ற பாடல் கவனிக்க வைக்கிறது. பின்னணி இசை ஓ.கே ரகம்.

ஒரே கூலித் தொழில், ஒரே குலசாமி, வறுமை இப்படி பல ஒற்றுமைகள் இருந்தாலும், சாதியின் அடிப்படையில் பிரிந்திருக்கும் இருபிரிவினர் என்ற மையக்கருத்தைப் படம் ஆரம்பித்த சில நொடிகளிலே தெளிவாகப் புரிய வைத்துவிடுகிறார்கள். படத்தில் சொல்லப்படுகிற சமத்துவ நோக்கம் எல்லாமே சிறப்பு.

மொத்தத்தில், ஒடுக்கப்படுகிற மக்களின் பக்கத்தில் நின்று அரசியல் பேசியிருக்கும் இந்த ’பராரி’ நமக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறான்!