நிதி நிறுவனத்தின் ரூ.525 கோடி மோசடி: பாஜக கூட்டணி கட்சி தலைவர் தேவநாதன் யாதவ் கைது!

நிதி நிறுவனத்தின் ரூ.525 கோடியை மோசடி செய்த வழக்கில், பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சியான ‘இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்’ என்ற ’லெட்டர்பேட்’ கட்சியின் தலைவரும், கடந்த மக்களைவைத் தேர்தலில் சிவகங்கைத் தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவரும், ‘வின் டிவி’ என்ற ‘உப்புமா டிவி’ நடத்தி வருபவருமான தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’ நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5,000-க்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்புத் தொகை கொண்ட உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலும் ஒன்றிய, மாநில அரசுகளின் ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதியப் பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிதி நிறுவனம், முதலீடு செய்யும் பணத்துக்கு அதிகளவில் வட்டி அளிப்பதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் சுமார் ரூ.525 கோடியை திரும்பக் கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டினர். குறிப்பாக, இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வட்டித் தொகையும், முதிர்வுத் தொகையும் வரவில்லை என்ற புகார் எழுந்தது.

மேலும், 150-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை, பணம் இல்லாமல் திரும்பியதால் சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்கள் மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவன அலுவலகத்தில் அவ்வப்போது திரண்டு முறையிட்டு வந்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் எழுத்துபூர்வமாக புகார் அளித்தனர்.

இதையடுத்து, அப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அந்த நிதி நிறுவனத்தின் தலைவராக உள்ள தேவநாதன் யாதவ் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டார். இவர் பாஜகவின் கூட்டணிக் கட்சியான இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவராகவும் உள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோற்றார் என்பதும், இவர் ‘வின் டிவி’ என்ற தொலைக்காட்சி சேனல் நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.