விக்ரம் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கும் ‘தங்கலான்’: “விடுதலைக்கு வித்திடும் குருதி யுத்தம்!”

விக்ரம் நடிப்பில், பா.இரஞ்சித் இயக்கும் திரைப்படம் ‘தங்கலான்’. விக்ரமுடன்  பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

அதிக பொருட்செலவில் வரலாற்றுப் பின்னணியுடன் உருவாகியுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷனும் இணைந்து தயாரித்துள்ளன. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி குடியரசு நாளன்று வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழு இன்று (நவம்பர் 1ஆம் தேதி) வெளியிட்டுள்ளது.

டீசர் எப்படி:

இது வரை இல்லாத புதுமையாய், தமிழ் சினிமாவின் அடுத்த கட்ட பாய்ச்சலாய், உலகின் தலை சிறந்த படங்களில் ஒன்றாய் ‘தங்கலான்’ இருக்கும் என்ற நம்பிக்கையை, மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக டீசர் இருக்கிறது.

கொடிய ராஜநாகம் ஒன்றின் கழுத்தை லாவகமாகத் திருகி, அதன் உடல் வேறு தலை வேறாக விக்ரம் பிரித்தெறிவதுடன் டீசர் தொடங்குகிறது. புழுதி பறக்கும் வறண்ட நிலத்தின் பின்னணியில் ரத்தமும் யுத்தமும் கலந்த பழங்குடி மக்களின் வாழ்க்கை தத்ரூபமாக டீசரில் காட்டப்படுகின்றன.

‘விடுதலைக்கு வித்திடும் குருதி யுத்தம்’ என்று டீசருக்கு இடையே வரும் வாசகத்துக்கு ஏற்ப, உழைக்கும் மக்களின் விடுதலை வேட்கையும், அதற்கான போரில் பெருக்கெடுத்தோடும் ரத்தமும் டீசரில் தெளிவாகத் தெரிகிறது.

கரிய நிறமும், ஜடா முடியும் கொண்ட தோற்றத்தில் விக்ரம் மிரட்டியுள்ளார். அவருக்கு இ ந்த பட்த்தின் நடிப்புக்காக சர்வ தேச அங்கீகாரமும், சர்வதேச விருதுகளும் நிச்சயம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முன்னெப்போதும் ஏற்காத ஒரு புதிய ‘கெட்அப்’பில் மாளவிகா மோகனன் தோன்றுகிறார்.

பா.இரஞ்சித்தும், அவரது படக்குழுவினரும் அபரிதமாக கடும் உழைப்பை கொட்டியிருக்கிறார்கள் என்பது ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது.

படம் திரைக்கு வரும் ஜனவரி 26ஆம் தேதிக்காக பேராவலுடன் காத்திருப்போம்!