”காவல் துறையினர் எப்படி நடந்து கொள்வார்கள் எனத் தெரியாது”: போராடும் மாணவர்களுக்கு ரஜினி மிரட்டல்!

அராஜக மோடி – அமித்ஷா அரசின் சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சி.க்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். “போராட்டத்தில் இறங்கினால் உங்களுக்கு (மாணவர்களுக்கு) தான் பிரச்சினை. காவல்துறையினர் எப்படி நடந்து கொள்வார்கள் எனத் தெரியாது. எஃப்.ஐ.ஆர் போட்டார்கள் என்றால் உங்கள் வாழ்க்கையையே முடிந்து போய்விடும்” என மிரட்டியுள்ளார் அவர்.

இந்திய அளவில் சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சி.க்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும், வெகுமக்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக இன்று (பிப்ரவரி 5) காலை சென்னையில் தனது வீட்டு வாசலில் செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது:

என்பிஆர் ரொம்பவே முக்கியம். 2010 மற்றும் 2015-ம் ஆண்டு காங்கிரஸ் செய்தது. 2021-ல் இந்திய நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுத்துதான் ஆகவேண்டும். அதில் யார் உள்நாட்டுக்காரர்கள், வெளிநாட்டுக்காரர்கள் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டாமா? அது ரொம்பவே முக்கியம். அதனால் என்ன பிரச்சினை என்று தெரியாது.

என்ஆர்சியை இன்னும் அமல்படுத்தவில்லை. அதைப் பற்றி யோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். அது சரியாக இருக்குமா என்பது எல்லாம் பார்த்துதான் முடிவு செய்வார்கள்.

சிஏஏ தொடர்பாகத் தெளிவாக இந்திய மக்களுக்கு எவ்விதப் பிரச்சினையுமில்லை என்று சொல்லிவிட்டார்கள். பக்கத்து நாடுகளிலிருந்து வருபவர்களுக்குக் கொடுப்பதா, வேண்டாமா என்பது தான் பிரச்சினை. முக்கியமாக முஸ்லிம்களுக்குப் பெரிய அச்சுறுத்தல் என்று பீதியைக் கிளப்பிவிட்டார்கள். அது எப்படி முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாகும்?

இஸ்லாமியர்களுக்கு இந்த நாட்டில் எந்த அளவுக்கு உரிமை இருக்கிறது என்று சொன்னால், பிரிவினைக் காலத்தில் பாகிஸ்தானுக்கு போக வேண்டும் என்று சென்றார்கள். இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் இதுதான் நம் நாடு, ஜென்ம பூமி என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை எப்படி இந்த நாட்டிலிருந்து வெளியே அனுப்புவார்கள்.

அந்த மாதிரி ஒன்று நடந்தால் இந்த ரஜினிகாந்த் அவர்களுக்காக முதல் ஆளாகக் குரல் கொடுப்பேன். அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது. சில அரசியல் கட்சிகள் அவர்களுடைய சுய லாபத்துக்காகத் தூண்டி விடுகிறார்கள். இதற்கு மதகுருக்களும் துணை போகிறார்கள். இது ரொம்ப தப்பான விஷயம்.

முதலில், மாணவர்களுக்குச் சொல்லிக் கொள்வது எல்லாம் போராட்டத்தில் இறங்கும்போது தீர யோசித்து ஆராய்ந்து, பேராசிரியர்களிடம் பேசி இறங்குங்கள். இல்லையென்றால் உங்களை அரசியல்வாதிகள் உபயோகிக்கப் பார்ப்பார்கள். அப்படி இறங்கிவிட்டால் உங்களுக்குத் தான் பிரச்சினை. காவல்துறையினர் எப்படி நடந்து கொள்வார்கள் எனத் தெரியாது. எஃப்.ஐ.ஆர் போட்டார்கள் என்றால் வாழ்க்கையையே முடிந்து போய்விடும்.

இலங்கை அகதிகள் இங்கு பல ஆண்டுகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கொடுக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். இலங்கையில் இருப்பவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது. ஏனென்றால் அவர்கள் சோழர்கள் காலத்திலிருந்து அங்கு இருக்கிறார்கள்.

இவ்வாறு ரஜினி தெரிவித்தார்.