திமுகவில் இணைந்தார் தமிழக பாஜக துணை தலைவர் அரசகுமார்!

அண்மையில் புதுக்கோட்டையில் திமுக எம்எல்ஏ பெரியண்ணன் அரசுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் அரசகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பேசிய அரசகுமார், ”எம்ஜிஆருக்குப் பிறகு நான் ரசிக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின். என்றைக்கும் நிரந்தர தலைவராக இருப்பவர் ஸ்டாலின் தான். முதலமைச்சரின்  இருக்கையை தட்டிப் பறிக்க நினைத்திருந்தால், கூவத்தூர் பிரச்சனையின்போதே ஸ்டாலின் முதல்வராகி இருப்பார். ஆனால், ஜனநாயக முறையில் முதல்வராக விரும்புபவர் அவர். காலம் கனியும். காரியங்கள் தானாக நடக்கும். ஸ்டாலின் அரியணை ஏறுவார்” என்றார்.

இது பாஜகவிலும் கூட்டணிக் கட்சியான அதிமுகவிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, “நான் யதார்த்தமாக தான் பேசினேன்.. ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்று நான் கூறவே இல்லை” என தன்னிலை விளக்கம் அளித்தார் அரசகுமார்.

ஆனால், இதை ஏற்காத பாஜக.வினர் தொடர்ந்து. அரசகுமாரை கண்டித்தும், விமர்சித்தும் வந்தனர். மேலும், அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என பாஜக தலைமை தடை விதித்த்தாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அரசகுமார் பாஜகவிலிருந்து விலகி, இன்று மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.